இலங்கை அரச பல்கலைக்கழகங்களுக்கு 2025/2026 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை மற்றும் புதிய பாடநெறிகள் குறித்து பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இன்று (06) நாடாளுமன்றத்தில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் மற்றும் புதிய கல்வியாண்டு ஆரம்பமாகும் திகதி குறித்து பிரதமர் ஹரினி அமரசூரிய நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
2025/2026 கல்வியாண்டிற்கான பல்கலைக்கழகப் பாடநெறிகளை 2026 செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகப் பிரதமர் தெரிவித்தார்.
பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் (Z-Score) வெளியிடப்பட்ட பின்னர், மாணவர் பதிவுப் பட்டியல்கள் அனைத்தும் 2026 ஓகஸ்ட் 31-ஆம் திகதிக்குள் அந்தந்தப் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து பாடநெறிகளை ஆரம்பிப்பதற்கான குறிப்பிட்ட திகதிகளை அந்தந்தப் பல்கலைக்கழகங்களே சுயாதீனமாகத் தீர்மானிக்க முடியும்.
இம்முறை இரண்டு புதிய விசேட பட்டப் பாடநெறிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன:
அதன்படி, ருஹுணு பல்கலைக்கழகம் – புவியியல் தகவல் அமைப்பு (Geographic Information Systems) – 50 மாணவர்கள்.
பேராதனைப் பல்கலைக்கழகம் – இலத்திரனியல் மற்றும் புத்திசார் அமைப்பு பொறியியல் (Electronic and Intelligent Systems Engineering) – 50 மாணவர்கள் என்பன அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய 281,810 மாணவர்களில், 176,538 பேர் பல்கலைக்கழகப் பிரவேசத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர்.
தகுதி பெற்றவர்களில் 42,937 மாணவர்களை இம்முறை அரச பல்கலைக்கழகங்களுக்குள் உள்வாங்க எதிர்பார்ப்பதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.
இம்முறை மொத்த மாணவர் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு செய்யப்படாவிட்டாலும், பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கான வசதிகளை மேம்படுத்தி, தரமான கல்வியை வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனப் பிரதமர் உறுதியளித்தார்.
பல்கலைக்கழகக் கல்வி நடவடிக்கைகள் நீண்டகாலமாகத் தாமதமடைந்து வந்த நிலையில், பிரதமரின் இந்த அறிவிப்பு மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.














