சோன்வே பிக்சர்ஸ் (zonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது.
ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை, இயக்குனர் கவாஸ்கர் காளியப்பன் இயக்கியுள்ளார். மேலும், பிரதாப் கண்ணன் மற்றும் இலங்கை, இந்தியா, மலேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பல முன்னணி கலைஞர்கள் இணைந்து தங்களது அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
இலங்கை தேசியத் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் வெளியீடாக, கடந்த வாரம் திரைக்கு வந்த இத்திரைப்படம், தற்போது நாடு முழுவதும் 20-இற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் மிக வெற்றிகரமாகத் திரையிடப்பட்டு வருகின்றது.
சர்வதேச கலைஞர்களின் பங்களிப்போடு, ஈழத்து சினிமாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ள ‘கூத்தாடி‘ திரைப்படத்திற்கு, சினிமா விமர்சகர்கள் மற்றும் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இத்திரைப்படத்தை திரையரங்குகளில் ரசித்துவிட்டு வெளிவந்த பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது உற்சாகமான கருத்துக்களை ஊடகங்கள் வாயிலாகப் பகிர்ந்து வருகின்றனர்.
திரையரங்குகளில் குடும்பம் குடும்பமாகவும், திரளான இளைஞர்களும் வருகை தந்து படத்தை ரசித்து வருவதாக ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.
படத்தின் கதைக்களம் மிகவும் நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்தந்த கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு கலைஞர்களைத் தேர்வு செய்து, அவர்கள் கச்சிதமாக, அசத்தலாக நடித்துள்ளதாகவும், படம் உண்மையிலேயே “வேற லெவல்” தரத்தில் உருவாகியுள்ளது என்றும் ரசிகர்கள் தங்களது பாராட்டுக்களை அள்ளி வீசியுள்ளனர்.
குறிப்பாக, படம் பார்க்கப் பார்க்க மிகவும் சுவாரசியமாகவும், மனதிற்கு மிகுந்த சந்தோஷத்தைத் தருவதாகவும் பெண் ரசிகர்கள் சிலாகித்துக் கூறுகின்றனர்.
படத்தில் இடம்பெற்றுள்ள ‘கூத்தாடி’ போன்ற கதாபாத்திரங்களின் நடிப்பு தங்களைக் கவர்ந்துள்ளதாகவும், ஈழத்துத் திரையுலகில் இந்த புதிய முயற்சி தங்களுக்குப் பெருமிதம் அளிப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இன்றைய நவீன சினிமா காலகட்டத்தில், நமது பழைய கால புராணக் கதைகள், இதிகாசங்கள், மகாபாரதம் போன்ற வரலாற்றுப் பின்னணிகளையும் மற்றும் கிராமப்புறப் பாரம்பரியக் கூத்து கலைகளையும் மையமாகக் கொண்டு, அதனைத் தற்கால இளைஞர்களிடம் மிக அற்புதமாகக் கொண்டு சேர்த்துள்ளதாக மூத்த கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் இயக்குனர் கவாஸ்கர் காளியப்பனுக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
ஈழத்து சினிமாவின் வளர்ச்சிக்கு மைல்கல்லாக அமைந்துள்ள இத்திரைப்படத்தை அனைவரும் திரையரங்குகளுக்கு நேரில் சென்று பார்த்து ஆதரவளிக்குமாறு ரசிகர்கள் அன்போடு கோரிக்கை விடுத்துள்ளதோடு, இந்தத் திரைப்படக் குழுவினர் மேலும் பல வெற்றிகரமான படைப்புகளைத் தந்து மென்மேலும் உயர வேண்டும் என்றும் வாழ்த்தியுள்ளனர்.
ரசிகர்களின் இந்த ஏகோபித்த வரவேற்பால் ‘கூத்தாடி’ திரைப்படம் 2ஆவது வாரத்திலும் அரங்கு நிறைந்த காட்சிகளாகத் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.














