திபெத்திய பௌத்த ஆன்மீகத் தலைவரான 14ஆவது தலாய் லாமாவின் 91ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, பியகம ஸ்ரீ போதிருக்காராம மகா விகாரையில் வரலாற்றுச் சிறப்புமிக்க மகா சங்க மாநாடு ஒன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு சியாம் மகா நிகாயத்தின் மகாநாயக்க தேரர் அதிவணக்கத்திற்குரிய கலாநிதி மல்வனே பன்னசார மகாநாயக்க தேரர் தலைமை தாங்கினார்.

முப்பெரும் நிகாயங்களைச் சேர்ந்த 130 உயர்மட்ட பௌத்த மதத் தலைவர்களும், 300க்கும் அதிகமான பக்தர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். முன்னாள் சபாநாயகர் அசோக ரணவல மற்றும் பியகம பிரதி மேயர் சுகத் திஸாநாயக்க உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் இதில் பங்கேற்றனர்.
பௌத்த சகோதரத்துவத்திற்கான அறக்கட்டளை, அதன் பிரதிச் செயலாளர் நாயகம் கலாநிதி தமிந்த பொரேஜ் தலைமையில், போதிருக்காராம மகா விகாரை மற்றும் பியகம முப்பெரும் நிகாய சங்க சபையுடன் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த மாநாட்டில் திபெத்திய பௌத்த பாரம்பரியத்தை பாதுகாப்பதில் இந்தியாவின் முக்கிய பங்களிப்பு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் அரச ஆதரவு குறித்து சிறப்பாக எடுத்துரைக்கப்பட்டது.
நிகழ்வின் நிறைவில், தலாய் லாமாவின் நீண்ட ஆயுளை வேண்டி 130 ஆண்டுகள் நீடித்த வாழ்வுக்கான விசேட செத் பிரித் ஆசீர்வாத பிரார்த்தனை இடம்பெற்றதுடன், கூட்டு ஆசீர்வாத அறிக்கையும் கையெழுத்திடப்பட்டது.

மேலும், மனிதநேயத்தை முன்னிறுத்தும் வகையில், அறக்கட்டளையின் கருணா தாரா திட்டத்தின் கீழ் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஒரு மாதத்திற்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்து பொதிகளும் வழங்கப்பட்டன.











