இலங்கை உள்ளிட்ட உலகெங்கும் உள்ள பௌத்த மக்களால் மிகுந்த பக்தியுடன் அனுஷ்டிக்கப்படும் முக்கியமான சமய தினங்களில் ஒன்றான எசல பௌர்ணமி தினம் இன்று (29) அனுஷ்டிக்கப்படுகிறது.
பௌத்த வரலாற்றில் பல முக்கியமான சம்பவங்கள் இடம்பெற்ற புனித நாளாக எசல பௌர்ணமி கருதப்படுகிறது.
கௌதம புத்தரின் வாழ்க்கையில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகளை நினைவுகூரும் நாளாகவும் இது விளங்குகிறது.
பௌத்த நம்பிக்கைகளின்படி,
இத்திருநாளில்தான் ராணி மகா மாயா தேவியின் கருவில் இளவரசர் சித்தார்த்தர் (கெளதம புத்தர்) கருவுற்றார்.
இளவரசர் சித்தார்த்தர் மற்றும் இளவரசி யசோதரா ஆகியோரின் மகனான இளவரசர் ராகுலன், ஒரு எசல பெளர்ணமி நாளில்தான் பிறந்தார்.
இதே நாளில்தான் இளவரசர் சித்தார்த்தர் இல்லற வாழ்க்கையைக் கைவிட்டு, துறவிக்குரிய ஆடையை அணிந்து, ஞானம் அல்லது புத்தத்துவத்தைத் தேடிச் சென்றார்.
ஒரு முதியவர், ஒரு நோயாளி மற்றும் ஒரு சடலம் ஆகியவற்றைக் கண்டதன் மூலம் இல்லற வாழ்க்கையின் மீதான பற்றின்மையை அவர் அடைந்தார்.
இளவரசரான தானும் உட்பட அனைவரும் முதுமை, நோய் மற்றும் மரணம் ஆகியவற்றை எதிர்கொள்ளத்தான் வேண்டும் என்பதை அவர் உணர்ந்தார்.
புத்தரின் முதல் தர்ம போதனையான தம்மச்சக்கப்பவத்தன சூத்திரம் சார்நாத் பகுதியில் ஐந்து சீடர்களுக்கு போதிக்கப்பட்டதும் எசல பௌர்ணமியுடன் தொடர்புடைய முக்கிய நிகழ்வாகும்.
இலங்கையில் எசல பௌர்ணமி தினம் வரலாற்று மற்றும் கலாசார ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா ஆரம்பிக்கப்படும் காலப்பகுதியும் இந்த பௌர்ணமியுடன் தொடர்புடையதாகும்.
இந்த புனித நாளை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள விகாரைகளில் விசேட பூஜைகள், தர்ம போதனைகள், சிலாப் பயிற்சிகள் மற்றும் சமய நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.
மக்கள் இந்த நாளில் ஆன்மீக சிந்தனைகளில் ஈடுபட்டு, தான தர்மங்களை மேற்கொண்டு, பௌத்த போதனைகளின்படி நல்லொழுக்க வாழ்க்கையை முன்னெடுக்க முயற்சிக்கின்றனர்.
எசல பௌர்ணமி தினம் சமாதானம், கருணை மற்றும் மனிதநேயத்தின் முக்கியத்துவத்தை நினைவூட்டும் புனித நாளாக பௌத்தர்களால் போற்றப்படுகிறது.
















