போர்டோவிற்கு மேற்கே பெருமளவிலான மக்களை வெளியேற்றத் தூண்டிய ஒரு பெரும் காட்டுத்தீயை பிரான்ஸ் தீயணைப்பு வீரர்கள் செவ்வாயன்று (28) இரவு முழுவதும் போராடி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
புதன்கிழமை அன்று வெப்பநிலை மற்றும் காற்று அதிகரித்து, தீ மேலும் பரவக்கூடும் என முன்னறிவிக்கப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை வந்துள்ளது.
தொடர் வெப்ப அலைகளால் ஏற்பட்ட கடுமையான வறட்சிக்குப் பிறகு, பிரபலமான சுற்றுலாத் தலமான போர்டோவிற்கு மேற்கே உள்ள லாண்டஸ் (Landes) பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ, முக்கியமாக பைன் மரக் காடுகளைக் கொண்ட 42,000 ஹெக்டேர் (1,03,784 ஏக்கர்) பரப்பளவிலான நிலத்தை அழித்துள்ளது.
ஒரு வார காலப் போராட்டத்திற்குப் பின்னர், ஐரோப்பிய சகாக்களின் உதவியுடன் பிரான்ஸ் தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இருப்பினும், இந்த கோடைக்காலத்தில் இதுவரை நான்காவதாக வரவுள்ள மற்றொரு வெப்ப அலை, வரும் மணிநேரங்களில் சூழலை மேலும் மோசமாக்கக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுகளில் பிரான்ஸ் முன்னெப்போதும் இல்லாத காட்டுத்தீ பருவத்தை சந்தித்து வருகிறது.
தற்பேது எரிந்த பகுதியின் அளவு, 2022 ஆம் ஆண்டின் முந்தைய சாதனையை ஏற்கனவே தாண்டிவிட்டது.
லாண்டஸ் பகுதி பைன் மரக் காடுகளால் சூழப்பட்டுள்ளது, அவை வறண்ட நிலையில் மிகவும் எளிதில் தீப்பற்றக்கூடியவை.
இந்தத் தீயில் சில நூறு வீடுகள் எரிந்து சாம்பலாயின.
அட்லாண்டிக் கடற்கரையில் உள்ள, ஒரே ஒரு சாலை வழியாக மட்டுமே அணுகக்கூடிய கேப் ஃபெரெட் தீபகற்பத்தை தீ அச்சுறுத்தியதால், விடுமுறைக்கு வந்தவர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் உட்பட சுமார் 220,000 பேரை அதிகாரிகள் வெளியேற்றியுள்ளனர்.
நூற்றுக்கணக்கானோர் பிரத்யேகமாக வாடகைக்கு அமர்த்தப்பட்ட படகுகள் மூலம் வெளியேறினர்.
பிஸ்கரோஸ் (Biscarrosse) நகருக்கு அருகே ஏற்பட்ட சிறிய தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்ததைத் தொடர்ந்து, அப்பகுதிக்குத் தெற்கே வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் மீண்டும் தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.















