இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பங்கேற்க மாட்டார்.
அவருக்குப் பதிலாக இதுவரை சர்வதேசப் போட்டிகளில் விளையாடாத வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் நபி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
31 வயதான பும்ரா, 2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத்துக்குப் பிறகு ஏற்பட்ட காயத்தைக் கையாண்டு வருகிறார்.
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அண்மையில்தான் சர்வதேச கிரிக்கெட்டிற்குத் திரும்பிய அவர், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் மீண்டும் களமிறங்கினார்.
இருப்பினும், அவர் இரண்டு போட்டிகளில் மட்டுமே பங்கேற்றார்.
முழங்காலில் ஏற்பட்ட அசௌகரியம் காரணமாக இறுதிப் போட்டியிலிருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டது.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டபோது பும்ரா ஆரம்பத்தில் பயணிக்கவிருந்த குழுவில் இடம்பெற்றிருந்தார்.
ஆனால், நீண்ட கால விளைவுகளைக் கருத்தில் கொண்டு, அவர் தனது குணமடையும் செயல்முறையைத் தொடரவுள்ளார்.
இந்த நிலையில், பும்ராவுக்குப் பதிலாக, இதுவரை சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமாகாத வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் நபி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தத் தகவலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இன்று (03) உறுதிப்படுத்தியது;
ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் முதன்முறையாக மூத்தோர் தேசிய அணியில் இடம்பிடித்துள்ளார்.
கடந்த இரண்டு ரஞ்சி கோப்பைத் தொடர்களில் மொத்தம் 104 விக்கெட்டுகளை வீழ்த்திய நபி, 2025-26 சீசனில் மட்டும் 60 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, ஜம்மு-காஷ்மீர் அணி தனது முதல் ரஞ்சி கிண்ணத்தை வெல்வதில் முக்கிய பங்காற்றினார்.
அண்மையில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா ‘ஏ’ அணியிலும் அவர் இடம்பெற்றிருந்தார்.
அங்கு நடைபெற்ற இரண்டு முதல் தரப் போட்டிகளில் அவர் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தியமையும் குறிப்பிடத்தக்கது.














