டாடா சன்ஸ் (Tata Sons) தலைவர் என். சந்திரசேகரன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ள போதிலும், 2027 பெப்ரவரி மாதத்தில் அவரது தற்போதைய பதவிக்காலம் முடியும் வரை அப்பதவியில் தொடர்ந்து நீடிப்பார் என்று இவிவகாரம் தெரிந்த வட்டாரங்கள் தெரிவிப்பதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
டாடா குழுமம் தனது பல்வேறு வணிக நடவடிக்கைகளில் பல சவால்களை எதிர்கொண்டுள்ள சூழலிலும், அவரது மறுநியமனம் தொடர்பாக டாடா சன்ஸ் மற்றும் டாடா டிரஸ்ட்ஸ் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவிய நிலையிலும் இந்த நிகழ்வு ஏற்பட்டுள்ளது.
டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக சந்திரசேகரனின் தற்போதைய பதவிக்காலம் எதிர்வரும் பெப்ரவரி மாதத்துடன் முடிவடையவுள்ளது.
விவகாரத்தின் முக்கியத்துவம் கருதி பெயர் குறிப்பிட விரும்பாத அந்தத் தகவல் வட்டாரம், அவர் பதவி விலகிவிட்டாலும் தனது பதவிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்வார் என்று தெரிவித்தது.
டாடா சன்ஸ் என்பது 400 பில்லியன் டொலர் மதிப்புள்ள டாடா குழுமத்தின் முதன்மை நிறுவனமாகும்.
இது டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), டாடா மோட்டார்ஸ் மற்றும் ஏர் இந்தியா உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்களைக் கட்டுப்படுத்துகிறது.
டாடா சன்ஸ் நிறுவனத்தின் 66% பங்குகள், அக்குழுமத்தின் அறக்கட்டளை அமைப்பான ‘டாடா டிரஸ்ட்ஸ்’ (Tata Trusts) வசம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.







