கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு சென்ற இண்டிகோ விமானம் 6E-723-இன் இடதுபுற இயந்திரம் செயலிழந்ததைத் தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் முழு அவசரநிலை அறிவிக்கப்பட்டதாக விமான நிலைய நிர்வாகம் இன்று (12) தெரிவித்தது.
அந்த அறிவிப்பைத் தொடர்ந்து, விமானம் பாதுகாப்பாக வந்திறங்குவதை உறுதி செய்வதற்கான அவசரக்கால நடவடிக்கை ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
224 பேருடன் அந்த விமானம் செவ்வாய் இரவு 11:37 மணிக்கு ஓடுபாதை 25-இல் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.
விமானம் இரவு 11:30 மணிக்கு வருவதாகத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அது இரவு 11:37 மணிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டதால், இரவு 11:29 மணிக்கு ‘முழு அவசரநிலை’ (Full Emergency) அறிவிக்கப்பட்டது.
இரவு 11:47 மணிக்கு இந்த முழு அவசரநிலை அதிகாரப்பூர்வமாக விலக்கிக்கொள்ளப்பட்டதாகவும், விமான நிலையத்தின் அனைத்து செயல்பாடுகளும் இயல்பு நிலையில் இருப்பதாகவும் சென்னை விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.







