முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை சிங்கப்பூரிலிருந்து நாடு கடத்தி அழைத்து வருவதில் இலங்கை சட்டரீதியான தடையை எதிர்கொண்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
இருப்பினும், அவரை மீண்டும் நாட்டிற்குக் கொண்டுவருவதற்கான சட்டரீதியான வழிமுறைகளை அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் குடிமகனாக அங்கு வசித்து வரும் அர்ஜுன மகேந்திரனை தனது பெயரை மாற்றிக்கொண்டுள்ளார்.
சிங்கப்பூரின் நாடு கடத்தல் சட்டத்தின் கீழ் உள்ள சட்டரீதியான தேவைகளை இலங்கை விடுத்த கோரிக்கை பூர்த்தி செய்யவில்லை என்று கூறி, மகேந்திரனை நாடு கடத்துமாறு இலங்கை விடுத்த கோரிக்கையை சிங்கப்பூர் ஏற்கனவே நிராகரித்து விட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மத்திய வங்கியின் பிணைப்பத்திர பரிவர்த்தனைகள் தொடர்பான சட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில், இலங்கையில் மகேந்திரன் தேடப்படும் நபராக உள்ளார்.
அரசுக்கு 11 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, 2019 ஜூன் மாதம் நிரந்தர மேல் நீதிமன்றத்தில் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கிடையில், பல்வேறு குற்றவியல் வழக்குகளில் தேடப்படும் சந்தேக நபர்களைச் சட்ட நடவடிக்கைகளுக்காக மீண்டும் இலங்கைக்கு அழைத்து வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, அதிகாரிகள் மொத்தம் 236 இன்டர்போல் (Interpol) ‘சிவப்பு அறிவிப்புகளை’ (Red Notices) பெற்றுள்ளதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
அவற்றில், 110 சிவப்பு அறிவிப்புகள் தற்போதைய அரசாங்கம் பதவியேற்ற பின்னரே பெறப்பட்டுள்ளன.
தேடப்படும் நபர்களில் 66 பேர் ஏற்கனவே இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும், மேலும் 97 பேர் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
39 நபர்கள் இருக்கும் இடங்களை அதிகாரிகள் கண்டறிந்துள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், தேடப்படும் மற்றொரு நபர் அடுத்த வாரம் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார் என்றும் கூறினார்.














