காட்டு யானைகள் புகையிரதங்களில் மோதுவதைத் தடுப்பதற்கு தொழில்நுட்பத் தீர்வை வழங்குவதற்கான திட்டம் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் தலைமையில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (01) பிற்பகல் நடைபெற்றது.
Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் ஒருங்கிணைப்பில், புகையிரதத் திணைக்களம், வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்புத் திணைக்களம் ஆகியவற்றுடன் இணைந்து, மக்கள் வங்கியின் முழுமையான நிதியுதவியுடன் அரச – தனியார் கூட்டுப் பங்களிப்புத் திட்டமாக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
3 Beam detection, Passive infrared ( PIR ), உணரிகள், தானியங்கி வெப்பநிலை உணரிகள் மற்றும் 20 கிலோகிராமிற்கு மேற்பட்ட விலங்குகள் புகையிரதங்களில் மோதுவதை அடையாளம் காணல் மற்றும் அபாய எச்சரிக்கை (Temper alarm) கட்டமைப்பை இது கொண்டுள்ளது. புகையிரதப் பாதையின் இருபுறமும் பொருத்தப்படும் சமிக்ஞை விளக்குகள் (சிவப்பு/மஞ்சள்/பச்சை) மற்றும் புகையிரத இயந்திரப் பெட்டிக்குள் நிறுவப்படும் விசேட திரை மூலம் யானை இருக்கும் துல்லியமான இடம் சாரதிகளுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படும்.
பின்னவல யானைகள் சரணாலய வளாகத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் முன்னிலையில் இந்த கட்டமைப்பின் மாதிரிச் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து அதற்கான அறிக்கையும் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செயல்முறை, காட்டு யானை விபத்துகள் அதிகம் நடைபெறும் 13 இடங்களில் ஒரு முன்னோடித் திட்டமாக எதிர்வரும் மாதம் முதல் செயற்படுத்தப்படவுள்ளதுடன், அத்திட்டத்தின் முன்னேற்றத்தை நேரடியாகக் கண்காணிப்பதற்காக புதிதாக உருவாக்கப்பட்ட “slps.lk” இணையத்தளமும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
மேலதிக புகையிரதப் பொது முகாமையாளர் பீ.டி.எஸ்.பீ. சந்திரசேன, வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் எம்.எஸ்.எல்.ஆர்.பீ. மாரசிங்க, வனப் பாதுகாப்பு பணிப்பாளர் நாயகம் எஸ்.சீ. பாலமகும்புர, மக்கள் வங்கியின் தலைவர் சந்தன குணியங்கொட ஆகியோரினால் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட்டதுடன், ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் (Clean Sri Lanka) பொறியியலாளர் எஸ்.பீ.சீ. சுகீஷ்வர உட்பட Clean Sri Lanka செயலகத்தின் அதிகாரிகள், புகையிரதத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், வனப் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் மக்கள் வங்கி ஆகிய நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.












