கடந்த ஆகஸ்ட் 15 அன்று ‘P 4447’ அதிவேகத் தாக்குதல் படகு (Fast Attack Craft) சம்பந்தப்பட்ட கடல்சார் சம்பவத்தைத் தொடர்ந்து காணாமல் போன அதிகாரியினுடையது என்று சந்தேகிக்கப்படும் உடல் பாகங்களை இலங்கை கடற்படை மீட்டுள்ளது.
குறித்த தினத்தில் அங்குலானா கடற்கரையிலிருந்து சுமார் மூன்று கடல் மைல் தொலைவில், இலங்கை கடற்படையின் அதிவேகத் தாக்குதல் படகு ஒன்று விபத்துக்குள்ளாகி மூழ்கியது.
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விரைவான மீட்பு நடவடிக்கையில், அதில் பயணித்த 12 மாலுமிகளில் 11 பேர் காப்பாற்றப்பட்டனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, காணாமல் போன அதிகாரியைத் தேடும் பணியை கடற்படை தீவிரமாக மேற்கொண்டது; இப்பணி சுற்றியுள்ள கடல் பகுதிகளிலும், பாணந்துரையிலிருந்து கொழும்பு வழியாக சிலாபம் வரையிலான கடற்கரைப் பகுதியிலும் நடைபெற்றது.
மேலும், இலங்கை விமானப்படை, அங்குலானா காவல்துறை, உள்ளூர் மீனவ சமூகங்கள் மற்றும் பிற தொடர்புடைய அமைப்புகளுடனும் கடற்படை ஒருங்கிணைந்து செயல்பட்டது.
இந்த நிலையில், இன்று காலை கடற்படை சுழியோடிகள் காணால் போன அதிகாரியின் உடல்களை மீட்டனர்.
இந்த உடல்கள் மீட்கப்பட்டதன் மூலம், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகக் கடற்படை தெரிவித்துள்ளது.
இனி பிரேதப் பரிசோதனை, அடையாளம் காணுதல் மற்றும் பிற அவசியமான நடைமுறைகள் மேற்கொள்ளப்படும்.
இச்சம்பவம் தொடர்பான சூழல்கள் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
குறிப்பிட்ட பகுதியில் நீரில் மூழ்கியிருந்த ஏதேனும் ஒரு பொருளின் மீது கப்பல் மோதியிருக்கலாம் என்று மீட்கப்பட்ட பணியாளர்கள் தெரிவித்த தகவல்களும் பரிசீலிக்கப்பட்டு வருவதாகக் கடற்படை கூறியது.
இருப்பினும், விசாரணை முழுமையடையும் வரை இச்சம்பவத்திற்கான காரணம் குறித்து எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை.













