இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான நுரைச்சோலை லக்விஜய அனல் மின் நிலையத்திற்கான முதல் நிலக்கரி சரக்கு புத்தளத்தை வந்தடைந்துள்ளது என்றும், இன்று (04) பிற்பகல் அதனை இறக்கும் பணிகள் தொடங்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிலக்கரி ஏற்றி வந்த ‘IVS TRADER’ கப்பல் புத்தளத்தை வந்தடைந்துள்ளது.
சரக்கை இறக்கும் பணிகள் தொடங்குவதற்கு முன்னதாக, சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பங்கேற்புடன் மேற்கொள்ளப்படும் தரப் பரிசோதனைகள் விரைவாக நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆற்றல், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க, நிலக்கரியின் தற்போதைய நிலைமையை ஆய்வு செய்வதற்காக இன்று (4) காலை லக்விஜய மின் நிலையத்திற்கு விஜயம் செய்தார்.
இந்த விஜயத்தின் போது, அடுத்த சில நாட்களுக்கு இயங்குவதற்குத் தேவையான நிலக்கரி கையிருப்பு நுரைச்சோலை மின்நிலையத்தில் உள்ளதை அமைச்சர் அவதானித்தார்.
மேலும், மின்நிலையத்தின் பணியாளர்கள் மற்றும் கீழ்நிலை ஊழியர்களைச் சந்தித்த அமைச்சர், தற்போதைய இக்கட்டான சூழலிலும் நிறுவனம் மற்றும் நாட்டின் மீது அர்ப்பணிப்புடன் தங்கள் கடமைகளைத் தொடர்ந்து ஆற்றி வருபவர்களுக்குத் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.













