நாட்டின் நகர்ப்புற பொதுப் போக்குவரத்து சேவையை நவீனமயப்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் மெட்ரோ பேருந்துத் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இரண்டாவது மெட்ரோ பேருந்து டிப்போவான கடவத்தை டிப்போ இன்று (07) உத்தியோகபூர்வமாக சேவையில் இணைக்கப்பட்டது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு, Clean Sri Lanka செயலணிக் காரியாலயம், இலங்கை போக்குவரத்து சபை (SLTB) மற்றும் லங்கா மெட்ரோ டிரான்சிட் (தனியார்) நிறுவனம் இணைந்து இந்தத் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றன.
மெட்ரோ திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட முதல் டிப்போ கடந்த செப்டம்பர் 4 ஆம் திகதி பத்தரமுல்லை – தலங்கம பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.
புதிய கடவத்தை டிப்போ, கம்பஹா மாவட்டத்தின் மஹர தேர்தல் தொகுதியில், கடவத்தை – கணேமுல்ல பிரதான வீதிக்கு அண்மையில் உள்ள இலங்கை போக்குவரத்து சபை டிப்போவுக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ பேருந்து சேவையின் கொள்ளளவை அதிகரிப்பதற்கும், நிர்வாகம், செயற்பாடு மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளை திறம்பட மேற்கொள்வதற்கும் முதல் கட்டமாக தலங்கம, கடவத்தை, ஏகல மற்றும் ரத்மலானை ஆகிய பகுதிகளை மையமாகக் கொண்டு நான்கு புதிய டிப்போக்கள் அமைக்கப்படவுள்ளதாக லங்கா மெட்ரோ டிரான்சிட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மெட்ரோ பேருந்து சேவையின் வழித்தட இலக்கம் 01 இன் கீழ் மாகும்புரவிலிருந்து மஹரகம ஊடாக கடவத்தை வரை போக்குவரத்து சேவைகள் இயக்கப்படுகின்றன.
இந்த வழித்தடத்தில் 15 புதிய மெட்ரோ பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், பயணிகளுக்கு வசதியான மற்றும் திறமையான போக்குவரத்து சேவையை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், பேருந்து தரிப்பிடங்கள் மேம்படுத்தல், ஒருங்கிணைந்த கட்டணச் செலுத்தும் முறைமைகள் அறிமுகம், டிப்போ வசதிகள் மற்றும் வாகன தரிப்பிடங்கள் அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளும் இந்தத் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படுகின்றன.
மெட்ரோ பேருந்துத் திட்டம் பொதுப் போக்குவரத்து சேவையை நவீனமயப்படுத்தும் அரசின் முக்கிய வேலைத்திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுவதுடன், 2026ஆம் ஆண்டிற்காக 800 மில்லியன் ரூபாவும், 2027ஆம் ஆண்டிற்காக 267.5 மில்லியன் ரூபா மூலதன ஒதுக்கீடும் இதற்காக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

















