புலமைப்பரிசில் பரீட்சையில் சாய்ந்தமருது கல்விக் கோட்டத்தில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்ற மாணவனையும் வெட்டுப்புள்ளிக்கு மேல் தகைமை பெற்ற மாணவர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.
மாணவர்களின் கல்விச் சாதனையைப் பாராட்டி அவர்களை மேலும் ஊக்குவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் அஸ்மா மலிக், ஆசிரிய ஆலோசகர் எஸ்.எம்.எம். அன்சார், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு செயலாளர் பொறியியலாளர் எம்.சி. கமால் நிசாத் ஆகியோருடன் பாடசாலை அதிபர், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் பெற்றோர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது சாய்ந்தமருது கல்விக் கோட்டத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்ற மாணவன் நினைவுச் சின்னம் மற்றும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார். அத்துடன் வெட்டுப்புள்ளிக்கு மேல் தகைமை பெற்ற ஏனைய மாணவர்களும் பாராட்டி வாழ்த்தப்பட்டனர்.
மாணவர்களின் இந்தச் சாதனை, அவர்களின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்களின் வழிகாட்டுதல் ஆகியவற்றின் சிறந்த வெளிப்பாடாக அமைந்துள்ளதாக நிகழ்வில் சுட்டிக்காட்டப்பட்டது.
கல்வியில் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பாடசாலை சமூகத்தினர் தமது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளதுடன் அவர்களின் எதிர்கால கல்விப் பயணம் மேலும் சிறப்பாக அமைய இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் இத்தகைய பாராட்டு நிகழ்வுகள் ஏனைய மாணவர்களுக்கும் சிறந்த கல்விச் சாதனைகளை நோக்கி பயணிப்பதற்கான உந்துதலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.














