இலங்கை இளைஞர் அனோஜன் சிவராசா விவகாரத்தை தீர்க்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உதவியை நாடுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி (TPA) தலைவர் மனோ கணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரதமர் மோடி, சவுதி அரேபிய இளவரசரும், பிரதமருமான மொஹம்மத் பின் சல்மானுடன் மிக நெருக்கமான உறவை பேணி வருவதுடன், மறுபுறம் இலங்கையின் நெருங்கிய நண்பராகவும் திகழ்கிறார் என மனோ எம்பி தெரிவித்துள்ளார்.
இலங்கையின் உயரிய விருதான “ஸ்ரீலங்கா ரத்னா” விருதை ஏற்றதன் மூலம், இலங்கையுடனான தனது நெருக்கமான உறவை பிரதமர் மோடி மேலும் வெளிப்படுத்தியுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமுகூ தலைவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்ததாவது:
<ஜனாதிபதியிடம் வேண்டுகோள்>
அனோஜன் எதிர்கொள்ளும் மிகுந்த துயரமான நிலை குறித்து, உங்கள் நண்பரும், “ஸ்ரீலங்கா ரத்னா” விருதை பெற்றவருமான இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அவசர கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு ஜனாதிபதி அனுர குமாரவிடம் நான் கேட்கிறேன்.
பிரதமர் மோடிக்கும், சவுதி அரேபிய பிரதமரும், இளவரசருமான, மொஹம்மத் பின் சல்மானுக்கும் இடையிலான நெருங்கிய உறவை கருத்தில் கொண்டு, அனோஜனுக்கு மனிதாபிமான அடிப்படையிலான தீர்வொன்றை பெற்று தர, பட்டத்து இளவரசர் சல்மானுடன் தனிப்பட்ட முறையில் பேசுமாறு பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுக்குமாறு உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.














