ஒரு இலட்சம் ஒக்சிஜன் செறிவூட்டிகளை கொள்வனவு செய்ய பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் வழங்கியுள்ளார். பி.எம்.கேர்ஸ் நிதியில் இருந்து குறித்த செறிவூட்டிகள் கொள்வனவு செய்யப்படவுள்ளன.
இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கொரோனா சிகிச்சைக்கு தேவைப்படும் மருத்துவ ஒக்சிஜன் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்ட குழுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ஒரு இலட்சம் ஒக்சிஜன் செறிவூட்டிகளை பி.எம்.கேர்ஸ் நிதியில் இருந்து கொள்வனவு செய்ய ஒப்புதல் அளித்தார். அவற்றை விரைவாக கொள்முதல் செய்து, அதிக பாதிப்புள்ள மாநிலங்களுக்கு விநியோகிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் பி.எம்.கேர்ஸ் நிதியில் இருந்து ஏற்கனவே 713 ஒக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்க ஒப்புதல் வாங்கியுள்ள நிலையில், மேலும் 500 ஒக்சிஜன் கொள்முதல் நிலையங்கள் அமைக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையங்கள் மூலம் மாவட்ட தலைநகரங்கள் மற்றும் 2 ஆம் கட்ட நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஒக்சிஜன் தேவையை நிறைவு செய்ய முடியும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



















