சிம்பாப்வே அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆப்கானிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியுள்ளது.
ஹராரே மைதானத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி, 44.5 ஓவர்கள் நிறைவில் 135 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ராஸா 38 ஓட்டங்களையும் ரியான் பர்ல் 38 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சில், ரஷித்கான் 3 விக்கெட்டுகளையும் நபி மற்றும் பரூக்கி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் பரீட் அஹமட், முஜிப் உர் ரஹ்மான் மற்றும் அஸ்மதுல்லா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 136 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, 37.4 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், ஆப்கானிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஹஸ்மதுல்ல ஷயீடி 38 ஓட்டங்களையும் மொஹமட் நபி ஆட்டமிழக்காது 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
சிம்பாப்வே அணியின் பந்துவீச்சில், பிளெஸிங் முஸரபானி மற்றும் டென்டாய் சடாரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் டுயோன் மேயர்ஸ் மற்றும் ரியான் பர்ல் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக ரஷித்கான் தெரிவுசெய்யப்பட்டதோடு, தொடரின் நாயகனாக ரஹமத் ஷா தெரிவுசெய்யப்பட்டார்.