டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 5ஆம் திகதி நடைபெற்றது. 70 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர். ஆம் ஆத்மி, பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது.
இதனை தொடர்ந்து டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில் காலை 8.50 மணி நிலவரப்படி பா.ஜ.க. 2 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
விஸ்வாஸ் நகர் மற்றும் ஷாஹ்தாரா ஆகிய தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது. விஸ்வாஸ் நகரில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் ஓம் பிரகாஷ் சர்மா 4997 வாக்குகளும், ஷாஹ்தாரா தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் சஞ்சய் கோயல் 3666 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
இதனிடையே, ஆம் ஆத்மி சார்பில் புதுடெல்லி தொகுதியில் போட்டியிட்ட அர்விந்த் கெஜ்ரிவால், கல்காஜி தொகுதியில் போட்டியிட்ட அதிஷி ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர்.