எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு குறைந்த வருமானம் பெறுகின்ற மக்களின் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதியொன்றை வழங்குவது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான கொள்கை முடிவுகளை எடுப்பதற்காக விவசாய கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த மற்றும் வர்த்தகம், வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு
அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க மற்றும் உணவுக் கொள்கை மற்றும் உணவு பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள், நேற்று மூன்றாவது முறையாக நாடாளுமன்ற வளாகத்தில் கூடியபோது, இந்த விடயம் கவனம் செலுத்தப்பட்டது.
சிங்கள, தமிழ் புத்தாண்டு காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதை தடுப்பது மற்றும் அந்தப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்பாட்டில் விற்பனை செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
2025ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் பண்டிகைக் காலத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மானிய விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்க ஒரு பில்லியன் ரூபா ஒதுக்க முன்மொழியப்பட்டுள்ளதோடு இது குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
சந்தையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்ற இறக்கங்களை குறைந்தபட்ச அளவில் பராமரிப்பது மற்றும் பேக்கரி பொருட்களின் விலைகளைக் குறைப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
மேலும் நெல் கொள்முதல் குறித்தும் இங்கு ஆராயப்பட்டதோடு நெல் கொள்வனவு செய்வதற்காக அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் கடன் வசதிகளின் கீழ் வாங்கப்படும் நெல்லின் அளவைக் கண்காணிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
மானிய விலையில் நுகர்வோருக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காக கூட்டுறவு மற்றும் சதோச வலையமைப்பை விரிவுபடுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. விலைக் கட்டுப்பாடுகளை ஏற்படுத்துவதன் மூலம் நுகர்வோருக்கு உகந்த சந்தையை உருவாக்குவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.