12 ஆண்டுகளில் முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட்டில் பெரிய பட்டத்தை ரோஹித் சர்மா தலைமையிலான அணி வென்றதால், இந்தியாவின் புதுப்பிக்கப்பட்ட 50 ஓவர் கிரிக்கெட் அணுகுமுறைக்கு இது ஒரு சான்றளிப்பு தருணமாக அமைந்தது.
மார்ச் 9, ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடந்த 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
இதனால், இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற அவுஸ்திரேலியாவை முந்தி, மூன்று முறை சாம்பியன்ஸ் டிராபியை வென்ற முதல் அணியாக இந்தியா ஆனது.
அதேநேரம், தோனிக்குப் பின்னர், பல ஐ.சி.சி ஆண்கள் வெள்ளை பந்து பட்டங்களை வென்ற இரண்டாவது இந்திய தலைவர் என்ற பெருமையையும் ரோஹித் சர்மா பெற்றார்.
ரோஹித் சர்மாவின் 76 ஓட்டங்கள் மற்றும் அவர்களின் வலிமையான சுழற்பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சு முயற்சியால், ஐசிசி போட்டிகளில் அவர்களின் மிகப்பெரிய எதிரிகளில் ஒருவரான நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
குல்தீப் யாதவ் மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் பந்து வீச்சில் பிரகாசித்ததுடன் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
மந்தமான துபாய் ஆடுகளத்தில் நியூசிலாந்து 251 ஓட்டங்கள் எடுத்து ஒரு திடமான தொடக்கத்தை வீணடித்தது.
ரோஹித்தின் வியூகம்
சேஸிங்கில் ரோஹித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் அணியை வழிநடத்தினார், தலைவராக போட்டியில் அவர் வகுத்த துணிச்சலான பாதை அணியை பெருமைக்கு இட்டுச் சென்றது – கடந்த 2023 ஆம் ஆண்டைப் போலல்லாமல்.
தொடக்க ஆட்டக்காரர் சுப்மான் கில் மற்றும் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோலி ஆரம்பத்திலேயே ஆட்டமிழந்த பின்னர், மிடில் ஆர்டரில் ஓட்டங்கள் குவிக்கும் சுமையை அவர் சுமார்ந்தார்.
ரோஹித் ஒரு தலைசிறந்த தந்திரவாதியைப் போல நிலைமைகளைப் புரிந்துகொண்டு நியூசிலாந்து பந்து வீச்சாளர்களை எதிர்த்து ஆடினார்.
ரோஹித் வெறும் 41 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டினார், பவர்பிளேயில் வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களை சிரமமின்றி எதிர்த்தாடினார்.
எனினும், சேஸிங்கைக் கடந்து செல்ல இறுதி வரை அவரால் முடியவில்லை.
இறுதியாக 83 பந்துகளை எதிர்கொண்டு 76 ஓட்டங்களை பெற்று அணிக்கு நல்லதொரு பங்களிப்பினை வழங்கினார்.
சேஸிங்கில் கைகொடுத்த சக வீரர்கள்
கே.எல். ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் நிதானமாக செயல்பட்டு இந்தியாவை இறுதிக் கோட்டிற்கு அருகில் கொண்டு செல்லும் வரை ஸ்ரேயாஸ் ஐயர் 48 ஓட்டங்களை எடுத்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
குறிப்பாக டெத் ஓவர்களில் இந்தியா ஹர்த்திக் பாண்டியாவை இழந்த பின்னரும், சேஸிங்கின் கத்தி முனையில் இருந்து அவர் போராடினார்.
இறுதியாக கே.எல். ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா 49 ஆவது ஓவரில் நான்கு விக்கெட்டுகள் மீதமிருந்த நிலையில் இந்திய அணியின் வெற்றியை உறுதிப்படுத்தி வரலாற்றில் தங்கள் இடத்தை பிடித்தனர்.
ரச்சீனின் நல்ல தொடக்கம்
துபாயில் இலங்கை நேரப்படி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 02.30 மணிக்கு ஆரம்பமான போட்டியில் ரோஹித் சர்மா 12 ஆவது முறையாக நாணய சுழற்சியில் தோல்வியடைந்தார்.
அதன் பின்னர், முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய மிட்செல் சாண்டனர் தலைமையிலான அணிக்கு, ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரச்சீன் ரவீந்திரா நல்லதொரு தொடக்கத்தை கொடுத்தார்.
அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சதம் அடித்த இடது கை தொடக்க வீரர், இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர்களான மொஹமட் ஷமி மற்றும் ஹார்டிக் பாண்டியாவின் பந்து வீச்சுகளுக்கு மீது தாக்குதலை தொடுத்தார்.
ரச்சின் தனது சிறந்த நிலையில் இருந்து, வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக உறுதியாக செயற்பட்டார்.
அடுத்த தலைமுறை நட்சத்திரங்களில் ஒருவராக அவரை நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்திய அதே அதிகாரத்துடன் விளையாடினார்.
இதனால், ஆறாவது ஓவரின் தொடக்கத்தில் ரோஹித் சர்மா சுழற்பந்து வீச்சுக்கு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அதன்படி, திருப்புமுனையைத் தேடி பந்தை வருண் சக்கரவர்த்தியிடம் கொடுத்தார்.
ஏழாவது ஓவரில் நியூசிலாந்து 50 ஓட்டங்களை கடந்தது, நிலையான நிலையில் இருந்தது.
இந்த நிலையில், 7.5 ஆவது ஓவரில் வருண் சக்ரவர்த்தி வில் யாங்கை 15 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்கச் செய்தவுடன் 58 ஓட்டங்கள் இணைப்பாட்டம் முடிவுக்கு வந்ததுடன், போட்டியில் திருப்பு முனை ஏற்பட்டது.
ரோஹித்தின் சிறந்த தந்திரோபாயம்
பவர்பிளேயின் ஒரு முனையிலிருந்து இறுதி வரை மொஹமட் ஷமியை ரோஹித் நம்பியிருந்தார். ஆனால் களத்தபடுப்பு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டவுடன், அவர் இரு முனைகளிலிருந்தும் சுழற்பந்து வீச்சுக்குத் திரும்பினார்.
அக்சர் படேல் அல்லது ரவீந்திர ஜடேஜாவைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு, அவுஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் விக்கெட் எடுக்காமல் இருந்த குல்தீப் யாதவை நோக்கி ரோஹித் திரும்பினார்.
இந்த நகர்வு அற்புதங்களைச் செய்தது, குல்தீப் யாதவ் தனது ஓவரின் முதல் பந்தில் ரச்சின் ரவீந்திரனை ஆட்டமிழக்கச் செய்தார்.
அதன் பின்னர், குல்தீப் 11 ஓட்டங்களுக்கு கேன் வில்லியம்சனின் முக்கியமான விக்கெட்டை வீழ்த்தியபோது ரோஹித் மற்றும் இந்திய ரசிகர்களுக்கு அதிக மகிழ்ச்சி ஏற்பட்டது.
சுழற்பந்து வீச்சாளர் அறிமுகப்படுத்தப்பட்டவுடன் நியூசிலாந்து அணி 18 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்தது.
டாம் லாதம் மற்றும் டேரில் மிட்செல் ஆகியோர் சுழற்பந்து வீச்சாளர்களால் கடுமையாக சோதிக்கப்பட்டனர்.
நான்காவது விக்கெட்டுக்கு இருவரும் 33 ஓட்டங்கள் சேர்த்தனர், ஆனால் அதற்காக அவர்கள் 66 பந்துகளை எதிர்கொள்ள நேரிட்டது.
நியூசிலாந்தின் துயரங்களுக்கு மேலதிகமாக, ரவீந்திர ஜடேஜா 14 ஓட்டங்களுக்கு லாதமை எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்க வைத்தார்.
முன்னேற போராடிய நியூசிலாந்து 50 க்கும் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் ஓட்டங்களை சேர்த்தது.
டேரில் மிட்செல்லுடன் இணைந்து 57 ஓட்டங்களை எடுத்திருந்தபோது க்ளென் பிலிப்ஸ் வேகத்தை அதிகரிக்க முயன்றார்.
அவர் தனது இன்னிங்ஸின் தொடக்கத்தில் சுறுசுறுப்பாக இருந்தார், ஒரு முறை குல்தீப்பின் பந்து வீச்சை அடித்து நொறுக்கினார். இருப்பினும், இந்தியாவின் சுழற்பந்து வீச்சின் பிடியில் அவரும் மூச்சுத் திணறினார்.
ரோஹித் தனது தந்திரோபாய திறமையை சிறப்பாக வெளிப்படுத்தினார், நான்கு பேர் கொண்ட தனது சுழல் தாக்குதலில் ஆயுதங்களை முழுமையாகப் பயன்படுத்தினார்.
அவர் தனது சுழற்பந்து வீச்சாளர்களை அடுத்தடுத்து கையாண்டு ஓவர்களை முடித்ததுடன், நியூஸிலாந்து துடுப்பாட்ட வீரர்களுக்கும் அவர் ஆடுகளத்தில் நிலைத்து நிற்க வாய்ப்பு கொடுக்கவில்லை.
வருண் சக்ரவர்த்தி மிடில் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசினார், பந்து வீச்சை இறுக்கமாக வைத்திருந்தார், மறுபுறம் ரவீந்திர ஜடேஜாவும் சமமாக சிறப்பாக செயல்பட்டார், தனது 10 ஓவர்களை வேகமாக முடித்தார்.
இறுதியில் வருணின் அழகான குக்லி மூலம் க்ளென் பிலிப்ஸ் 34 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார், இது நியூசிலாந்து மீதான அழுத்தத்தை அதிகரித்தது.
இந்திய சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக நியூஸிலாந்து அணிக்கு மைக்கேல் பிரேஸ்வெல் 40 பந்துகளில் 53 ஓட்டங்களை எடுத்து ஓரளவு நிம்மதி அளித்தார்.
இறுதியாக நியூஸிலாந்து 50 ஓவர்களுக்கு 7 விக்கெட் இழப்புக்கு 251 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தது.
போட்டியின் ஆட்டநாயகனாக ரோஹித் சர்மாவும், தொடரின் ஆட்டநாயகனாக ரச்சீன் ரவீந்திராவும் தெரிவானார்கள்.