அம்பேபுஸ்ஸ – திருகோணமலை வீதியின் பல்வெஹெர பகுதியில் முச்சக்கர வண்டியொன்று லொறியுடன் மோதியதில் நெதர்லாந்து நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று (18) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தம்புள்ளையிலிருந்து ஹபரணை நோக்கிச் சென்ற கார் ஒன்று கடை ஒன்றின் முன் நிறுத்துவதற்காக வீதியில் இடதுபுறமாகத் திரும்பிய போது அதே திசையில் சென்ற முச்சக்கரவண்டி ஒன்று காரின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படாத போதிலும் அதே திசையில் பயணித்த மற்றுமொரு முச்சக்கரவண்டி மேற்படி வாகனங்கள் மீது மோதாமல் இருப்பதற்காக திடீரென வீதியின் வலது பக்கம் திரும்பி எதிர்திசையில் வந்த லொறியுடன் மோதியுள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த 02 வெளிநாட்டு ஆண்களும் 02 பெண்களும் படுகாயமடைந்ததுடன் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
54 வயதுடைய நெதர்லாந்து பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய லொறி கைது செய்யப்பட்டுள்ளதுடன், தம்புள்ளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.