ஹோண்டுராஸ் கடற்கரையில் ஒரு சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் பிரபல கரிஃபுனா இசைக்கலைஞர் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
திங்கட்கிழமை (18) இரவு ரோட்டன் தீவில் இருந்து பிரதான நிலப்பகுதி நகரமான லா சீபாவுக்குச் சென்று கொண்டிருந்த லான்சா ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கடலில் விழுந்து நொறுங்கியது.
இவ் விபத்தின் போது குறித்த விமானத்தில் விமானி உட்பட 18 பேர் இருந்துள்ளனர் எனவும் அவர்களில் ஐந்து பேர் உயிர் தப்பியுள்ளனர் எனவும் ஒருவர் மாயமாகியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மீட்கப்பட்ட ஐந்து பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விமானம் முழு உயரத்தை அடையத் தவறிவிட்டதாகவும், கடலில் மோதிய பின்னர் விரைவாக மூழ்கியதாகவும் அந் நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.
உயிர் பிழைத்தவர்களை உள்ளூர் மீனவர்கள் மீட்டனர்.
விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக ஹோண்டுரான் சிவில் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் முன்னாள் காங்கிரஸ் உறுப்பினரும், ஆப்பிரிக்க மற்றும் பூர்வீக இனக்குழுவின் உறுப்பினருமான ஆரேலியோ மார்டினெஸ் சுவாசோவும் ஒருவர்.
அவர் ஆப்பிரிக்க மற்றும் பூர்வீக இனக்குழுவின் கலப்பு பாரம்பரியத்தைச் சேர்ந்தவர். மார்டினெஸ் சுவாசோவும் அமெரிக்க குடியுரிமையைப் பெற்றிருந்தார்.