தென் அமெரிக்க நாடான எக்குவடோரில் சேவல் சண்டை அரங்கில் துப்பாக்கிதாரிகள் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நான்கு பேரை கைது செய்துள்ளதாக அந் நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எக்குவாடோரின் லா வலென்சியா கிராமப்புற பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலின் ஒரு நாளைக்கு பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை வடமேற்கு மனாபி மாகாணத்தில் விசேட பொலிஸ் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்போது ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கி தாரிகள் பயன்படுத்திய போலி பொலிஸ், இராணுவ சீருடைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பான காட்சிகள், துப்பாக்கி ஏந்தியவர்கள் குறித்த பகுதிக்குள் துப்பாக்கியால் சுடுவதை வெளிக்காட்டியது.
அதே நேரத்தில் பயந்துபோன பார்வையாளர்கள் பீதியால் ஓடுவதையும் காட்சிகள் வெளிப்படுத்தின.
போலி இராணுவ உடையில் தாக்குதல் நடத்தியவர்கள் சேவல் சண்டையில் போட்டியாளர்களாக இருந்த ஒரு குற்றவியல் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
லத்தீன் அமெரிக்க நாட்டில் 20 குற்றவியல் கும்பல்கள் செயல்பட்டு வருவதாக நம்பப்படுகிறது, முக்கிய போதைப்பொருள் வழிகளைக் கட்டுப்படுத்த போட்டியிடுகின்றன.
உலகின் 70% கொக்கேய்ன் இப்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு அனுப்பப்படுவதற்கு முன்பு எக்குவாடோர் துறைமுகங்கள் வழியாகவே செல்கிறது என்று அந் நாட்டு ஜனாதிபதி டேனியல் நோபோவா கூறியுள்ளார்.
உலகின் இரண்டு பெரிய கொக்கேய்ன் உற்பத்தியாளர்களான அண்டை நாடான கொலம்பியா மற்றும் பெருவிலிருந்து எக்குவாடோருக்கு இந்த போதைப்பொருள் கடத்தப்படுகிறது.
போதைப்பொருள் தொடர்பில் கடந்த ஜனவரியில் 781 கொலைகள் நடந்துள்ளன.
அவற்றில் பல சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவை என்றும் கூறப்படுகின்றது.