கிளிநொச்சியில் நடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினராகிய சிறீதரன் ஆற்றிய உரை ஒன்றைப் பார்த்தேன். அதில் அவர் ஒரு பெண் வேட்பாளரின் பெயரை விழித்து ஒரு விடயத்தை சொல்கிறார். அப்பெண் வேட்பாளர் தனக்கு நம்பிக்கையான ஒருவரிடம் கேட்டிருக்கிறார், இந்தத் தேர்தலில் நாங்கள் வென்றால் அந்த வெற்றி கட்சியின் செயலாளர் என்ற அடிப்படையில் சுமந்திரனுக்கும் சேரும் தானே? என்ற பொருள்பட.
அவர் அவ்வாறு கேட்டதன் அர்த்தம் என்ன? உள்ளூராட்சி சபையில் தாங்கள் பெறக்கூடிய வெற்றி என்பது சுமந்திரனைப் பலப்படுத்தும் என்ற சந்தேகம் அல்லது பயம் அவருக்கு உண்டு என்று அர்த்தம். ஒரு கட்சியின் உள்ளூராட்சி சபை வேட்பாளர் அந்த கட்சிக்கு கிடைக்கும் வெற்றி அந்தக் கட்சியின் செயலாளரை பலப்படுத்தி விடக் கூடாது என்று பயப்படுகிறார் என்றால் அதன் பொருள் என்ன? கட்சி இரண்டாக நிற்கிறது என்று பொருள். அதை அந்த மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் பகிரங்கமாகக் கூறுகிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்.தேர்தல் தொகுதியில் அவர் மட்டும்தான் வெற்றி பெற்றார்.குடாநாட்டில் தமிழரசுக் கட்சிக்கு ஒரு ஆசனம்கூட கிடைக்கவில்லை. அவ்வாறு வெற்றி பெற்ற ஒரே நாடாளுமன்ற உறுப்பினரான சிறீதரன் மேற்கண்டவாறு கதைக்கிறார் என்றால் அந்தக் கட்சி எங்கே நிற்கிறது? உள்ளதில் பெரிய கட்சி. பாரம்பரியமான ஒரு கட்சி. குறிப்பாக வடக்கு கிழக்கில் கிராம மட்டத்தில் ஒப்பீட்டளவில் பலமான ஒரு வலைப்பின் னலைக் கொண்டிருக்கும் கட்சி. அந்தக் கட்சியின் வேட்பாளர் ஒருவரே அப்படிச் சந்தேகப்படுகிறார் என்றால், தமிழ்த் தேசிய அரசியலின் நிலை என்ன?
இவ்வாறு தமிழ்த் தேசிய அரசியலில் உள்ள பெரிய கட்சி தனக்குள் இரண்டாகி நிற்கும் போது அது எப்படி ஏனைய கட்சிகளோடு இணையும்? தமிழரசுக் கட்சிக்கு அடுத்தபடியாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒப்பீட்டளவில் ஒரு பெரிய கூட்டை உருவாக்கியிருக்கிறது. இக்கூட்டானது தமிழ் மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்குமா? சங்குக் கூட்டணி முன்னுரைவிட இப்பொழுது பலவீனமாகக் காணப்படுகிறது. முன்பு அக்கூட்டோடு காணப்பட்ட கட்சிகள் சில அங்கிருந்து விலகி சைக்கிள் கூட்டுக்குள் இணைந்து விட்டன. இந்தக் கூட்டுகளுக்குள் வராத விக்னேஸ்வரனின் கட்சியும் உண்டு. ஆக மொத்தம் தமிழ்த் தேசியப் பரப்பில் நான்கு தரப்புகள் காணப்படுகின்றன.
ஆனால் தமிழ்த் தேசியத் தரப்பை கடந்த நாடாளுமன்ற தேர்தலில் எதிர்பாராத விதமாக தோற்கடித்த தேசிய மக்கள் சக்தியானது ஒரே ஒரு தரப்பாக, ஆளுங்கட்சியாக,அரச பலத்துடன் களத்தில் நிற்கின்றது.கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர்களுக்கு கிடைத்த வெற்றிகள் எதிர்பாராமல் கிடைத்தவை. ஆனால் உள்ளூராட்சி சபைகளில் அவர்கள் வெற்றிகளை எதிர்பார்த்து வியூகம் அமைத்து வேலை செய்கிறார்கள்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கட்சிகள் எவையும் மாபெரும் பொதுக்கூட்டங்களை ஒழுங்குபடுத்தவில்லை. காசு இல்லை என்பது மட்டும் ஒரு காரணம் அல்ல.கட்சிகள் மத்தியில் தேர்தலை நோக்கிய எழுச்சி காணப்படவில்லை. ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரான தமிழ் அரசியல் சூழலானது பிரம்மாண்டமானதாக, நம்பிக்கையூட்டத் தக்கதாக,மாற்றத்தைக் காட்டுவதாக இருக்கவில்லை. பல கட்சிகள்;பல கூட்டுக்கள்; பல சுயேட்சைகள்… இவ்வாறாக தமிழ் வாக்குகள் பலவாகச் சிதறின. அதுவும் உற்சாகக் குறைவுக்கு ஒரு காரணம். இவ்வாறு தமிழ்த் தேசியக் கட்சிகள் பெரிய கூட்டங்களை ஒழுங்குபடுத்தத்தவறிய ஒரு பின்னணியில், தேசிய மக்கள் சக்தியானது பெரிய கூட்டங்களை ஒழுங்குபடுத்தியது. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பாசையூரில் ஒரு கூட்டத்தை ஒழுங்குபடுத்தியது.
வழமையாக தமிழ்த் தேசியக் கட்சிகள் யாழ்ப்பாணத்தில் தங்கள் பெருங்கூட்டங்களை கிட்டு பூங்காவிலோ அல்லது முத்தவெளியிலோ வைப்பதுண்டு. ஆனால் விதிவிலக்காக தேசிய மக்கள் சக்தியானது ஒதுக்குப்புற கரையோரக் கிராமமாகிய பாசையூரில் பெருங்கூட்டத்தை ஒழுங்குபடுத்தியது. கரையோரப் பகுதி வாக்காளர்களைக் கவர்வது அவர்களுடைய நோக்கங்களில் ஒன்றாக இருந்தது.
வழமையாக கரையோரப் பகுதியில் உள்ள கத்தோலிக்க மக்கள் மத்தியில் யாருக்கு வாக்களிப்பது என்ற விடயத்தில் திருச்சபை மதகுருக்கள் கூடுதலான செல்வாக்கைச் செலுத்துவதுண்டு. ஆனால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சபையில் ஒரு பகுதியினர் அனுரவை எதிர்பார்ப்போடும் ஆர்வத்தோடும் பார்க்கத் தொடங்கினர். இதன் காரணமாக கரையோரக் கிராம மக்கள் யாருக்கு வாக்களிக்கக்கூடும் என்பதனை அனுமானிக்க முடியாமல் இருந்தது. தேர்தலுக்குப் பின்,சிவில் சமூகச் செயற்பாடுகளில் அதிகமாக ஈடுபடுகின்ற ஒரு கத்தோலிக்க மத குருவிடம் அது தொடர்பாக நான் கேட்டபோது, அவர் சொன்னார்.. “ஓம் இந்த முறை எங்களால் நமது மக்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்பதனை சரியாக மதிப்பிட முடியவில்லைத்தான்” என்று.
விளைவாக தேசிய மக்கள் சக்திக்கு எதிர்பாராத வெற்றி கிடைத்தது. அந்த எதிர்பாராத வெற்றியை இப்பொழுது அடுத்தடுத்த கட்டங்களுக்கும் விஸ்தரிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு பேசிய மக்கள் சக்தி உற்சாகமாக உழைக்கின்றது. நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்த வெற்றிகளால் தமிழ்த் தேசியக் கட்சிகளைத் தோற்கடிக்கலாம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
அதனால் நாடாளுமன்றத் தேர்தலை போலவே உள்ளூராட்சி சபை தேர்தலை நோக்கியும் அவர்கள் பெரும் கூட்டங்களை தமிழ்ப் பகுதிகளில் ஒழுங்கு படுத்துகிறார்கள். அரச பிரதானிகள் வடக்கு கிழக்குக்கு அதிகரித்த அளவில் வருகை தருகிறார்கள். அரச வைபவங்கள் தேர்தல் பிரச்சார நோக்கத்தோடு பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுகின்றன.அரச வளங்களும் தேர்தலை நோக்கித் திருப்பப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் உண்டு. குறிப்பாக மத வைபவங்களையும் மதத்தலங்களையும் அரச பிரதானிகள் வாக்காளர்களை கவர்வதற்கான களங்களாகப் பயன்படுத்துவதாக தமிழ்த் தேசியக் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
அண்மையில் மாவிட்டபுரம் கந்தசாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்த பொழுது அங்கே பிரதமர் ஹரிணி விருந்தினராக வரவழைக்கப்பட்டார்.அதே காலப்பகுதியில் பலாலி வீதியில் அதுவரை திறக்கப்படாத பகுதி திறக்கப்பட்டது. இப்பாதை திறப்பு வைபவம் தேர்தல் நோக்கத்தைக் கொண்டதா என்று கொழும்பில் உள்ள “நீதிக்கும் அபிவிருத்திக்குமான மையத்தின்” பணிப்பாளராகிய,சட்டச் செயற்பாட்டாளர் ரட்னவேல் கேட்டிருக்கிறார்.
ஆளுங்கட்சி என்ற வசதி காரணமாக, அரச வைபவங்களையும் திணைக்களக் கூட்டங்களையும்,அரசு நிகழ்வுகளையும் மறைமுகமாகப் பிரச்சார நோக்கத்தோடு பயன்படுத்தக்கூடிய வாய்ப்புகளை தேசிய மக்கள் சக்தி கொண்டிருக்கின்றது. தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்ற பிரதேச சபைகளுக்கு தடையின்றி நிதி உதவி செய்வோம் என்று அனுர மன்னாரில் கூட்டத்தில் பேசும் போது கூறியுள்ளார். அப்படியென்றால் தேசிய மக்கள் சக்தி அல்லாத வேறு கட்சிகள் வெற்றி பெறும் பிரதேச சபைகளுக்கு அரச உதவிகள் உடனடியாக கிடைக்காது என்று பொருளா? அரசாங்கம் தேர்தல் விதிமுறைகளை மீறுவதாக சுமந்திரன் உட்பட தமிழ்த் தேசிய கட்சிகளின் பிரதானிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.
ஆனால் தேசிய மக்கள் சக்தியானது தமிழ் மக்கள் மத்தியில் அனுரவை ஒரு கதாநாயக பிம்பமாக கட்டியெழுப்பும் நோக்கத்தோடு உற்சாகமாக உழைத்து வருகின்றது. கடந்த வியாழக்கிழமை கிட்டு பூங்காவில் நடந்த பெருங் கூட்டத்தில் போலீசாரின் தடுப்புகளை மீறி பொதுமக்கள் மத்தியில் இருந்து அனுரவை நோக்கி ஆர்வத்தோடு கைகள் நீண்டன. அவரோடு கை குலுக்கவும் அவரோடு தன் படம் எடுப்பதற்கும் ஒரு பகுதி இளையோர் ஆர்வமாக காணப்படுகிறார்கள்.
அது செயற்கையாக திட்டமிட்டு அழைத்து வரப்பட்ட ஒரு கூட்டம் அல்ல. இயல்பாக வந்த ஒரு கூட்டம். அவர்களில் பலர் அரசியல் விழிப்போடும் மாற்றத்தின் மீது கொண்ட தாகத்தினாலும் அவ்வாறு அனுரவோடு கைகுலுக்க வரவில்லை.அவர்களில் பெரும்பாலானவர்கள் கைபேசி கலாச்சாரத்தின் பிரதிநிதிகள்; கைபேசிச் செயலிகளின் கைதிகள். பிரபல்யமானவரோடு அல்லது அதிகாரத்தில் இருப்பவரோடு சேர்ந்து தன்படம் எடுப்பது அல்லது அவரோடு கைகுலுக்கி படம் எடுப்பது, அதைச் செயலிகளில் பரப்பி அதன் மூலம் தன்னைப் பிரபல்யப்படுத்துவது. கைபேசிச் செயலி கலாச்சாரம் எனப்படுவது மனிதர்களின் தன்மோகத்தை அதிகப்படுத்தியிருக்கிறது. புத்திசாலித்தனத்திற்கும் மந்தமானதுக்கும் இடையிலான இடைவெளியை மேலும் ஆழமாக்கியிருக்கிறது. இப்படிப்பட்டதோர் தொழில்நுட்ப அரசியல் சூழலில் ரிக்ரொக் தலைமுறையின் இளையவர்கள் அனுரவோடு படமெடுப்பதற்கும் கைகுலுக்குவதற்கும் ஆர்வமாகக் காணப்படுகிறார்கள்.
இவர்களில் ஒரு பகுதியினர் ஏற்கனவே அர்ஜுனாவை ஆர்வத்தோடு பார்க்கின்றார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அர்ஜுனாவுக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் விழுந்த வாக்குகள் இரண்டு விடயங்களைத் தெளிவாகக் காட்டின.ஒன்று,தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கட்சிகளின் மீது வெறுப்படைந்திருக்கிறார்கள்.இரண்டு,அவர்கள் மாற்றத்தைக் கேட்கிறார்கள். தமிழ்த் தேசியக் கட்சிகளால் அந்த மாற்றத்தைக் காட்ட முடியவில்லை. அதனால்தான் கைபேசி செயலிகளால் உருப்பெருக்கப்பட்ட அர்ஜுனாவை ஒரு பகுதியினர் எதிர்பார்ப்போடு தேர்ந்தெடுத்தார்கள்.இன்னொரு பகுதியினர் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தார்கள்.
அதே அரசியல் சூழல்தான், அதே தொழில்நுட்பச் சூழல்தான் இப்பொழுதும் நிலவுகின்றது. அதே தமிழ் கட்சிகள்தான் அதே ஆளை ஆள் பிடித்து தின்னும் அரசியல்தான் இப்பொழுதும் உண்டு.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் புதிய கூட்டை ஒரு மாற்றமாக மாற்றுத் தலைமையாக தமிழ் வாக்காளர்கள் பார்க்கிறார்களா இல்லையா என்பது தேர்தல் முடிவுகளில் தெரியவரும். ஆனால் ஒன்றுமட்டும் உண்மை. தமிழ் மக்கள் மாற்றத்தைக் கேட்கின்றார்கள். தமிழ்த் தேசிய அரசியலில் புதிய பண்புரு மாற்றத்தைக் கேட்கின்றார்கள். தமிழ்த் தேசிய அரசியலானது புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக தன்னை புதுப்பித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. கைபேசிச் செயலிகளின் கைதிகளாக உள்ள ஒரு தலைமுறையினர் மத்தியில் தன்னை ஸ்தாபிக்க வேண்டியிருக்கிறது. அதாவது தமிழ்த்தேசிய அரசியலை; தேசத் திரட்சியை புதிய தரிசனங்களோடு முன்னெடுக்க வேண்டியிருக்கிறது.