உக்ரேனுக்கு எதிராக ரஷ்யாவுக்காகப் போரிட படைகளை அனுப்பியதை வட கொரியா முதல் முறையாக உறுதிப்படுத்தியுள்ளது.
வடகொரியாவின் அரசு செய்தி நிறுவனமான KCNA-வில் வெளியான ஒரு அறிக்கையில், ஜனாதிபதி கிம் ஜாங் உன் பிறப்பித்த உத்தரவின்படி, குர்ஸ்க் எல்லைப் பகுதியை ரஷ்யப் படைகள் “முழுமையாக விடுவிக்க” தங்கள் வீரர்கள் உதவியதாக பியோங்யாங்கின் இராணுவம் கூறியது.
வட கொரிய வீரர்களின் “வீரத்தை” ரஷ்ய தலைமைத் தளபதி வலேரி ஜெராசிமோவ் பாராட்டிய சில நாட்களுக்குப் பின்னர் பியோங்யாங்கின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
மொஸ்கோ முதல் முறையாக போரில் வடகொரியாவின் ஈடுபாட்டைப் பகிரங்கமாக ஒப்புக்கொண்டது.
வட கொரியாவிலிருந்து அனுப்பப்பட்ட 11,000 வீரர்களில் குறைந்தது ஆயிரம் பேர் மூன்று மாதங்களில் உயிரிழந்துள்ளதாக நம்புவதாக மேற்கத்திய அதிகாரிகள் முன்னதாக கூறியிருந்தனர்.
தென் கொரிய மற்றும் மேற்கத்திய உளவுத்துறை, கடந்த ஆண்டு வடகொரியா குர்ஸ்க்கு ஆயிரக்கணக்கான வீரர்களை அனுப்பியதாக நீண்ட காலமாக செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் வடகொரியாவின் புதிய அறிவிப்பின்படி, பியோங்யாங் மற்றும் மொஸ்கோ இடையேயான பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தின்படி வீரர்களை அனுப்ப முடிவு செய்யப்பட்டது என்று KCNA தெரிவித்துள்ளது.