பாணந்துறை, ஹிராண பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளார்.
ஹிராண பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசார நிகழ்வில் இன்று (29) அதிகாலை இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரு நபர்கள் துப்பாக்கிச் சூட்டினை முன்னெடுத்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் காயமடைந்தனர்.
அவர்கள் இருவரும் பாணந்துறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மேற்கு மாலமுல்ல பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு T-56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் தப்பியோடியுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பாணந்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.