ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவனை தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் மேலும் 06 பேர் ஹோமாகம பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் 6 பேரும் ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகியதையடுத்து உடனடியாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் கிரிந்திவெல, தெல்கொட, புத்தல, குளியாப்பிட்டிய மற்றும் கலன்குட்டிய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 22,23 மற்றும் 24 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி ஹோமாகம பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்த ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் சிலர் அங்கு தங்கியிருந்த அதே பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மற்றுமொரு மாணவனை பலமாக தாக்கியுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த பல்கலை மாணவன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் பகிடிவதைக்கு எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் ஹோமாகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.