கணக்காய்வாளர் நாயகம் பதவிக்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் பரிந்துரைக்கப்பட்ட பெயர்களை அரசியலமைப்பு பேரவை தொடர்ச்சியாக நிராகரித்து வரும் நிலையில், மற்றுமொரு நபரின் பெயரை ஜனாதிபதி விரைவில் பரிந்துரைக்கவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
தேசிய கணக்காய்வு அலுவலகம் கடந்த 7ஆம் திகதி முதல் கணக்காய்வாளர் நாயகம் அல்லது பதில் கணக்காய்வாளர் நாயகம் இன்றி இயங்கி வருகின்றது.
இதற்கு முன்னர் ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்பட்ட எச்.டி.பி. சந்தன, எல்.எஸ்.ஐ. ஜயரத்ன மற்றும் இராணுவத்தின் உள்வாரி கணக்காய்வு பணிப்பாளர் ஓ.ஆர்.ராஜசிங்க ஆகியோரின் பெயர்கள் அரசியலமைப்பு சபையினால் நிராகரிக்கப்பட்டன.
இறுதியாக ஆர்.ராஜசிங்கவின் பெயர் பரிசீலனைக்கு வந்தபோது, அதற்கு ஆதரவாக 4 வாக்குகளும் எதிராக 5 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இந்த நிலையில் ஜனாதிபதியின் பரிந்துரைகள் காரணமின்றி நிராகரிக்கப்படுவதாக அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ கவலை வெளியிட்டுள்ளார்.














