93 ஆண்டுகால உள்நாட்டு இறைவரித் திணைக்கள வரலாற்றில், 2203 பில்லியன் ரூபா அதிகபட்ச வருவாயை ஈட்ட உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் முடிந்துள்ளதாகவும், இது இந்த ஆண்டு வருவாய் இலக்கை விட 33 பில்லியன் ரூபா மேலதிக வருவாய் சேகரிப்பு எனவும், கடந்த ஆண்டில் ஈட்டப்பட்ட வருவாயுடன் ஒப்பிடும்போது இது 15% அதிகரிப்பாகும் என்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்கள பணிப்பளர் நாயகம் ருக்தேவி பெர்ணான்டோ தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் செவ்வாய்க்கிழமை காலை (30) திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது உள்நாட்டு இறைவரித் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உள்நாட்டு இறைவரித் திணைக்கள வரலாற்றில் முதல் முறையாக, ஜனாதிபதி ஒருவர் இத்திணைக்களத்திற்கு வருகை தந்திருந்ததை குறிக்கும் வகையில் செவ்வாய்க்கிழமை காலை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, திணைக்களத்திற்குச் சென்று ஊழியர்களைச் சந்தித்தார். 2025 ஆம் ஆண்டில் அடைந்த முன்னேற்றம் மற்றும் 2026 ஆம் ஆண்டிற்கான புதிய திட்டங்கள் குறித்து அவர் ஆராய்ந்ததோடு பணியாளர்களுடான சந்திப்பிலும் இணைந்து கொண்டார்.
அரசாங்கம் எதிர்பார்த்ததை விட அதிக வருவாயை பெற்றுத் தந்தமைக்காக உள்நாட்டு இறைவரித் திணைக்கள அனைத்து ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்த ஜனாதிபதி, அதே இலக்கை நோக்கி தொடர்ந்து பணியாற்றி, நாட்டிற்குத் தேவையான பொருளாதார மாற்றத்தை அடைவதற்கு அர்ப்பணிக்குமாறு அனைவரிடமும் கோரிக்கை விடுத்தார்.
யாருக்கும் வரி செலுத்தாமல் இருப்பதற்கான சலுகை வழங்கப்படவில்லை என்றும், தனிப்பட்ட, குடும்ப மற்றும் அரசியல் நெருக்கங்களை அடிப்படையாகக் கொண்ட வரி கலாச்சாரம் முடிந்துவிட்டது என்றும் கூறிய ஜனாதிபதி, வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு எதிராக தராதரம் பாராது சட்டத்தை அமுல்படுத்தத் தயங்க மாட்டேன் என்றும் வலியுறுத்தினார்.
வரி வசூலிப்பதென்பது அடக்குமுறை அல்லது வற்புறுத்தல் அல்ல என்பதைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அது அரசின் உரித்து என்றும், அந்த பங்களிப்பைப் பெறுவதற்கு சட்டதிட்டங்கள் மற்றும் பதவிகளிலும், ஊழியர்களிலும் தேவையான மாற்றங்கள் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த அனைத்துப் பொருளாதார சாதனைகளின் பலன்களும் நாட்டு மக்களுக்குச் சென்றடைவதை உறுதி செய்வதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார். மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த தேவையான சேவைகளை திறம்படச் செய்வதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது என்றும், போக்குவரத்து கட்டமைப்பின் புதிய மாற்றத்திற்கும் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளின் வளர்ச்சிக்கும் அரசாங்கம் போதுமான நிதியை வழங்கும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
வரி தொடர்பான கல்வியறிவை அதிகரித்தல், எளிமையான வரி முறைமையை முன்னெடுத்தல் மற்றும் பணியாளர் பற்றாக்குறையை நிரப்புதல் போன்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதன் மூலம் அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய வரிப் பணத்தை முறையாகச் சேகரிப்பதற்காக, திட்டமிட்ட இலக்குகளின் ஊடாக செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.
உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அடைந்த வெற்றிக்கு, திணைக்கள அதிகாரிகளின் தொழில்முறைத் திறன் மற்றும் அர்ப்பணிப்பு காரணம் என்று உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் ருக்தேவி பெர்னாண்டோ தெரிவித்தார்.
2026 ஆம் ஆண்டுக்கு 2401 பில்லியன் ரூபாய் வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், வரி இணக்கத்தை அதிகரித்தல் மற்றும் வரி அடிப்படையை விரிவுபடுத்துதல் போன்ற திட்டங்கள் மூலம் அந்த இலக்கை அடைய எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
2026 ஆம் ஆண்டில், மூன்றாம் தரப்பு தரவு பரிமாற்றத்தை விரிவுபடுத்துதல், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சொத்துக்கள் குறித்து விரிவான விசாரணை நடத்துதல், ரெமிஸ் முறைமையை (RAMIS system) திணைக்களத்தின் கீழ் கொண்டுவருதல், எச்சரிக்கை அடிப்படையிலான கணக்காய்வை வலுப்படுத்துதல், ஈ- இன்வொயிஸ் அறிமுகப்படுத்துதல், வரிச் செயற்பாடுகளுக்காக நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் மற்றும் வரி ஒழுக்கத்தை அதிகரித்தல் போன்ற பணிகளை செயல்படுத்த எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தொழில் அமைச்சர் மற்றும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதிஅமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜெயவீர, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ருக்தேவி பெர்னாண்டோ உள்ளிட்ட சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

















