காலி – உரகஸ்மன்ஹந்திய பகுதியில் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 10 கிளிகளை விற்பனை செய்ய முயன்ற இரண்டு சந்தேக நபர்கள் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களில் ஒருவர் கிளி ஒன்றை காலி எல்பிட்டிய பிரதேசத்தில் விற்பனை செய்ய முயன்ற போதே வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட இருவரும் எல்பிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து ஒருவருக்கு 25 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் மற்றையவருக்கு 50 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 10 கிளிகளையும் வனப்பகுதியில் விடுவிக்குமாறு நீதவான், வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.














