கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, கம்பஹா பிராந்திய குற்ற விசாரணைப் பணியகத்தின் மோட்டார் சைக்கிள் படைப்பிரிவைச் சேர்ந்த 6 பொலிஸ் அதிகாரிகளும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் நேற்று (26) கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
அத்துடன், 29 ஆம் திகதி அடையாள அணிவகுப்பு நடத்தவும் நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையிலேயே குறித்த சந்தேகநபர்கள் 6 பேரும் இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கத்தோலிக்கப் பிரிவின் கட்டுப்பாட்டில் உள்ள கொட்டதெனியாவவில் உள்ள ஒரு பண்ணையில் உதவி தோட்ட நிர்வாகியாகப் பணிபுரியும் அருட்தந்தை, திப்பிட்டிகொட தேவாலயத்தில் வழிபாட்டை நடத்திவிட்டுத் திரும்பும் போதே தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தின் போது குறித்த அருட்தந்தையை மோட்டார் சைக்கிள் போக்குவரத்து பிரிவைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கடுமையாகத் தாக்கிய நிலையில் அவர் நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.














