இங்கிலாந்தில் பெண்கள் வெளியில் செல்லும் நேரங்களில் அவர்களை ரகசியமாகப் படம்பிடித்து, அந்த காணொளிகளை இணையத்தில் பதிவேற்றுவதன் மூலம் ஆண்கள் பணம் சம்பாதிப்பதாக பிபிசி புலனாய்வு கண்டறிந்துள்ளது.
இந்த காணொளிகள் பெரும்பாலும் “வாக்கிங் டூர்ஸ்” (Walking tours) அல்லது “நைட்லைஃப் கன்டென்ட்” (Nightlife content) என்ற பெயரில் யூடியூப், டிக்டாக், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் வெளியிடப்படுகின்றன.
இவை பெரும்பாலும் ஆடை அணிந்திருக்கும் பெண்களை இலக்காகக் கொண்டு, அவர்களுக்குத் தெரியாமல் பின்னால் இருந்தோ அல்லது அவர்களின் உடல் பாகங்கள் தெரியும்வகையில் தாழ்வான கோணங்களிலோ (Low angles) படம்பிடிக்கப்படுகின்றன.
இந்நிலையில் இவ்வாறு படம்பிடிக்கப்பட்ட சுமார் 50 பெண்களை பிபிசி குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.
அவர்களில் பெரும்பாலானோருக்குத் தங்களைப் படம்பிடித்ததே தெரியாது எனவும் அந்த காணொளிகளை பார்த்த பின்னர் அவர்கள் மிகுந்த அச்சத்திற்கும் அவமானத்திற்கும் உள்ளாகியுள்ளனர் எனவும் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் இது போன்ற 65-க்கும் மேற்பட்ட இணைய பக்கங்களை பிபிசி குழு அடையாளம் கண்டுள்ளது.
இவற்றின் வீடியோக்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 300 கோடிக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளன.
இதேவேளை, லண்டன், மியாமி, பாங்காக் போன்ற உலக நகரங்களில் இவ்வாறான காணொளிகள் எடுக்கப்பட்டாலும், இங்கிலாந்தின் மான்செஸ்டர் (Manchester) நகரம் இந்தப் படப்பிடிப்புகளுக்கு மிகவும் பிரபலமான இடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் ரகசியமாக நடத்திய சோதனையில், ஒரு உள்ளூர் டாக்ஸி டிரைவர் மற்றும் ஸ்வீடனிலிருந்து இதற்காகவே இங்கிலாந்து வந்த இருவர் உட்பட பலரை பிபிசி குழுவினர் அடையாளம் கண்டுள்ளனர்.
பொது இடங்களில் படம்பிடிப்பது குற்றமல்ல என்றாலும், பெண்களைத் துன்புறுத்தும் நோக்கோடும், அவர்களின் அந்தரங்கத்தை மீறும் வகையிலும் எடுக்கப்படும் இத்தகைய வீடியோக்கள், துன்புறுத்தல் (Harassment) மற்றும் மறைமுகப் பாலியல் அத்துமீறல் (Voyeurism) சட்டங்களின் கீழ் வரக்கூடும் என்று வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் பெண்களுக்கு எதிரான இத்தகைய வன்முறைகளையும் அத்துமீறல்களையும் அரசாங்கம் பொறுத்துக்கொள்ளாது என்று இங்கிலாந்து உள்துறைச் செயலர் ஷபானா மஹ்மூத் தெரிவித்துள்ளார்.















