ஊதியம் மற்றும் பயிற்சி இடங்கள் தொடர்பாக அரசாங்கத்துடன் நீடித்து வரும் மோதலில், இங்கிலாந்தின் வதிவிட மருத்துவர்கள் (Resident Doctors) மீண்டும் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
பிரித்தானிய மருத்துவ சங்கம் (BMA) நடத்திய இந்த வாக்கெடுப்பின் மூலம், தொழிற்சங்கம் அடுத்த ஆறு மாதங்களுக்குப் போராட்டங்களை நடத்த புதிய அதிகாரத்தைப் பெற்றுள்ளது.
இருப்பினும், போராட்டத்திற்கான திகதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
53% உறுப்பினர்கள் பங்கேற்ற இந்த வாக்கெடுப்பில், 93% பேர் போராட்டத்தைத் தொடர ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
கடந்த 2023 வசந்த காலத்தில் தொடங்கிய இந்த பிரச்சினையினால் இதுவரை 14 முறை வேலைநிறுத்தங்கள் நடைபெற்றுள்ளன.
இதேவேளை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் 2.5% ஊதிய உயர்வை வழங்க அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.
மருத்துவப் பயிற்சியின் இரண்டாம் ஆண்டிற்குப் பின்னர் விசேட பயிற்சிக்காக (Speciality Training) மருத்துவர்கள் விண்ணப்பிப்பார்கள்.
கடந்த ஆண்டு 10,000 இடங்களுக்கு 30,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இந்த கடும் போட்டி தகுதியான மருத்துவர்களுக்கு வேலை கிடைப்பதைத் தடுப்பதாகத் தொழிற்சங்கம் கூறுகிறது.
இந்நிலையில் இது குறித்து சுகாதார மற்றும் சமூக பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில் ,
புத்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே பிரித்தானிய மருத்துவ சங்கத்துடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறோம் எனவும் 2026-ஆம் ஆண்டில் மேலும் வேலைநிறுத்தங்கள் ஏற்படாத வகையில், அனைவருக்கும் ஏற்ற ஒரு சுமுகமான உடன்பாட்டை எட்டுவோம் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ஸ்காட்லாந்து அரசாங்கம் புதிய ஊதிய சலுகையை வழங்கியதை அடுத்து, அங்குள்ள பிரித்தானிய மருத்துவ சங்க கிளை தனது வேலைநிறுத்தப் போராட்டத்தை ரத்து செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

















