ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இரண்டாம் கட்ட முத்தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தை, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைநகர் அபுதாபியில் நாளை 04 ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது.
இப்பேச்சுவார்த்தை மறுநாள் 05 ஆம் திகதியும் நடைபெறும் என்று உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி நேற்று முன்தினம் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் டெலிகிராம் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது,
‘உக்ரைன் பேச்சுவார்த்தை குழுவிடமிருந்து எனக்கு அறிக்கை கிடைத்துள்ளது. இப்போருக்கு உண்மையாகவும், கௌரவமாகவும் தீர்வு காணும் நோக்கில் ஆக்கபூா்வமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட நாங்கள் தயாராக இருக்கிறோம்’ என்றுள்ளார்.
சுமார் 4 ஆண்டுகளாக நீடித்து வரும் இப்போரை நிறுத்தஇ அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகம் கடந்த ஓரண்டாகத் தீவிரமாகச் செயற்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அபுதாபியில் ரஷ்யா, உக்ரைன், அமெரிக்கா ஆகிய 3 நாடுகளும் பங்கேற்கும் முத்தரப்புச் பேச்சுவார்த்தை நாளை (4) ஆரம்பமாகவுள்ளது.
இதேவேளை, ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுவர் கிரில் டிமிட்ரிவ், அமெரிக்காவின் புளோரிடாவில் அந்நாட்டின் அமைதித் தூதுக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த ஆலோசனையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


















