சியோஸ் தீவுக்கு அருகே கடலோர காவல்படை கப்பலுடன் படகு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஏஜியன் கடல் பகுதியில் 14 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்ததாக கிரேக்க கடலோர காவல்படை அறிவித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை (03) மாலையில், கடலோர காவல்படை அதிகாரி ஒருவர், அந்த சிறிய புலம்பெயர்ந்தோர் படகு சியோஸ் நோக்கிச் செல்வதைக் கண்டதாகவும், அதைத் திருப்பி அனுப்ப உத்தரவிடப்பட்டதாகவும் ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
கடத்தல்காரர்கள் கடலோர காவல்படை கப்பலை நோக்கி படகை திருப்பியதால் மோதல் ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதுவரை, 24 புலம்பெயர்ந்தோர் மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும் இரண்டு கடலோர காவல்படை அதிகாரிகள் சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
கடலோர காவல்படை கப்பல்கள், தனியார் படகுகள் மற்றும் டைவர்ஸ் உதவியுடன் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவிலிருந்து குடியேறுபவர்கள் மற்றும் புகலிடம் கோருபவர்களுக்கு ஐரோப்பாவிற்குள் நுழையும் முக்கிய வழிகளில் ஒன்றாக கிரீஸ் நீண்ட காலமாக கருதப்படுகிறது.
2015–2016 ஆம் ஆண்டில், துருக்கியிலிருந்து சியோஸ் உட்பட கிரேக்க தீவுகளுக்கு கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் கடந்து சென்றதாகவும் கண்காணிப்பு தரவுகள் தெரிவிக்கின்றன.













