இலங்கையின் புதிதாக நியமிக்கப்பட்ட கணக்காய்வாளர் நாயகம் சமுதிகா ஜெயரத்ன, இலங்கையின் 42 ஆவது கணக்காய்வாளர் நாயகமாக இன்று (05) தேசிய கணக்காய்வு அலுவலகத்தில் அதிகாரப்பூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்தப் பதவியை வகிக்கும் முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெறுவதால், இந்த நியமனம் ஒரு வரலாற்று மைல்கல்லைக் குறிக்கிறது.
அரச கணக்காய்வாளர் நாயகமாக, கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தின் பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பதவி வகித்த சமுதிகா ஜெயரத்னவை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை ஒருமனதாக கடந்த செவ்வாயன்று அங்கீகாரம் வழங்கியது.
அரச கணக்காய்வாளர் நாயகமாக பதவி வகித்த டபிள்யூ .பி.சி.விக்கிரமரத்ன கடந்த 2025 ஏப்ரல் மாதம் ஓய்வு பெற்றதையடுத்து புதிய கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கான நியமனம் தொடர்பில் ஜனாதிபதிக்கும் அரசியலமைப்பு பேரவைக்குமிடையில் இழுபறி நிலைமை ஏற்பட்டது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் 4 தடவைகள் முன்மொழியப்பட்ட புதிய கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கான பெயர்களை அரசியலமைப்பு பேரவை நிராகரித்திருந்தது.
இவ்வாறான நிலையில் கடந்தவாரம் அரசியலமைப்பு பேரவை கூடிய போது கணக்காய்வாளர் நாயகம் பதவிக்காக ஜனாதிபதியினால் ஐந்தாவது நபராக கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தின் பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பதவி வகித்த சமுதிகா ஜெயரத்னவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.
சமுதிகா ஜெயரத்னவை (53 வயது) நியமிக்க அரசியலமைப்பு பேரவை ஒருமனதாக அங்கீகாரம் வழங்கியது.












