டிக்டொக் (TikTok) செயலியின் வடிவமைப்பு சிறுவர்களை அதற்கு அடிமையாக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறி, ஐரோப்பிய ஒன்றிய (EU) அதிகாரிகள் அந்த நிறுவனத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
TikTok மீதான விசாரணையின் ஆரம்ப முடிவுகளை வெளியிட்ட ஐரோப்பிய ஒன்றியம், செயலியில் உள்ள சில முக்கிய அம்சங்கள் போதைப்பொருளைப் போல பயனர்களை அடிமையாக்குவதை ஊக்குவிப்பதாகத் தெரிவித்துள்ளது.
குறிப்பாக எல்லையற்ற ஸ்க்ரோல் (Infinite Scroll) , தானாக இயங்கும் காணொளிகள் (Autoplay), புஷ் அறிவிப்புகள் (Push Notifications), தனிப்பயனாக்கப்பட்ட பரிந்துரை வழிமுறை (Algorithms), இவை சிறுவர்களின் மன ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்குப் பெரும் ஆபத்தை ஏற்படுத்துவதாகவும், இது டிஜிட்டல் சேவைகள் சட்டத்தை (DSA) மீறும் செயல் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.
2024 பெப்ரவரியில் தொடங்கப்பட்ட இந்த விசாரணையின் போது சேகரிக்கப்பட்ட சில தரவுகளை ஐரோப்பிய ஒன்றிய செய்தித் தொடர்பாளர் தோமஸ் ரெக்னியர் (Thomas Regnier) மேற்கோள் காட்டினார்.
13 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களால் நள்ளிரவுக்குப் பிறகு அதிகம் பயன்படுத்தப்படும் சமூக ஊடகமாக TikTok உள்ளது. 12 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 7 சதவீதமானோர் நாளொன்றுக்கு 4 முதல் 5 மணிநேரம் வரை இந்தச் செயலியில் செலவிடுகின்றனர்.
“TikTok தனது வடிவமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வந்து சிறுவர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று ஐரோப்பிய ஒன்றிய தொழில்நுட்பத் தலைவர் ஹென்னா விர்க்குனென் (Henna Virkkunen) தெரிவித்துள்ளார்.
இதேவேளை, விதிகளை மீறும் பட்சத்தில், TikTok நிறுவனத்தின் தாய் நிறுவனமான ‘பைட் டான்ஸ்’ (ByteDance) இன் உலகளாவிய வருவாயில் 6 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றிய ஒழுங்குமுறை ஆணையம் அச்சுறுத்தியுள்ளது.
இந்தக் கண்டுபிடிப்புகளை முற்றாக மறுத்துள்ள TikTok செய்தித் தொடர்பாளர், “ஒன்றியத்தின் இந்த ஆரம்ப முடிவுகள் எமது தளத்தைப் பற்றிய தவறான மற்றும் தகுதியற்ற சித்தரிப்பாகும். இதனைச் சவாலுக்கு உட்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்,” என்று தெரிவித்துள்ளார்.
















