லண்டன், தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் சில பகுதிகளில் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் (Met Office) தெரிவித்துள்ளது.
இதையொட்டி, இன்று நண்பகல் முதல் மஞ்சள் நிற எச்சரிக்கை (Yellow Warning) விடுக்கப்பட்டுள்ளது.
பல இடங்களில் 10-15 மி.மீ மழையும், பலத்த காற்று வீசுவதுடன் சில பகுதிகளில் 20-30 மி.மீ வரையிலும் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையைத் தொடர்ந்து, இங்கிலாந்து முழுவதும் நூற்றுக்கணக்கான வெள்ள எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நிலம் ஏற்கனவே மழையினால் முழுமையாக நனைந்து ஈரமாக (Saturated) இருப்பதால், மேலும் மழை பெய்யும்போது வெள்ள அபாயம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வாளர் டாம் மோர்கன் எச்சரித்துள்ளார்.
இதேவேளை, புதன்கிழமை வரை மேகமூட்டமும் மழையும் தொடர்வதுடன் வியாழன் முதல் வறண்ட மற்றும் குளிரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு இங்கிலாந்தின் மலைப்பகுதிகளில் பனிப்பொழிவும் இருக்கக்கூடும்.
இதேவேளை, நேற்று மாலை நிலவரப்படி, இங்கிலாந்தில் 104 அவசர எச்சரிக்கைகளும் (Warnings), 215 முன் எச்சரிக்கைகளும் (Alerts) விடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக டெவோன், ஹாம்ப்ஷயர் மற்றும் வார்விக்ஷயர் பகுதிகளில் பாதிப்பு அதிகமாக இருக்கலாம்.
தென்மேற்கு இங்கிலாந்து மற்றும் தெற்கு வேல்ஸில் 2026-ஆம் ஆண்டின் ஒவ்வொரு நாளும் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.
இது வழக்கமான அளவை விட 50% அதிகமாகும்.
இந்நிலையில் வெள்ள நீரில் வாகனங்களை ஓட்ட வேண்டாம் என சுற்றுச்சூழல் முகமையின் வெள்ளப்பணி மேலாளர் சாரா குக் மக்களை வலியுறுத்தியுள்ளார்.
கடந்த ஜனவரி மாதத்தில் இங்கிலாந்தைத் தாக்கிய இன்கிரிட் (Ingrid), கொரெட்டி (Goretti) மற்றும் கடந்த வாரம் தாக்கிய செண்ட்ரா (Chandra) ஆகிய மூன்று புயல்களால் ஏற்கனவே கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
வடக்கு அயர்லாந்தில் கடந்த 149 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஈரமான ஜனவரி மாதமாக இது பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.













