லார்ட் மேண்டல்சன் (Lord Mandelson) அமெரிக்காவிற்கான பிரிட்டிஷ் தூதராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, அவர் “தீவிரமான” மற்றும் “நெருக்கமான” தணிக்கை (vetting) நடைமுறைக்கு உட்படுத்தப்பட்டிருப்பார் என பிரிட்டனின் உளவு அமைப்பான “எம்.ஐ.6 அமைப்பின் முன்னாள் தலைவர் ரிச்சர்ட் மூர் (Sir Richard Moore) தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பரில் பதவியில் இருந்து விலகிய ரிச்சர்ட் மூர் (Sir Richard Moore), ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியில் , மேண்டல்சனுக்கும் பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கும் (Jeffrey Epstein) இடையிலான உறவு குறித்த புதிய தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில், இந்த தணிக்கை செயல்பாட்டில் தான் பங்கேற்கவில்லை என்று கூறினார்.
இதேவேளை, கடந்த வாரம் பிரதமர் கீர் ஸ்டார்மர், “மேண்டல்சனின் பொய்களை” நம்பியதற்காக பொதுமக்களிடமும் எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்களிடமும் மன்னிப்பு கேட்டார்.
மேலும் மேண்டல்சன் தூதராக நியமிக்கப்படுவதற்கு முன்பு தனக்கு எப்ஸ்டீனைத் தெரியாது என்று கூறியதை நம்பி தான் ஏமாற்றப்பட்டதாக பிரதமர் ஸ்டார்மர் தெரிவித்தார்.
இந்நிலையில் கடந்த 2008-ஆம் ஆண்டு எப்ஸ்டீன் பாலியல் குற்றவாளியாக தண்டிக்கப்பட்ட பிறகும், மேண்டல்சன் அவருடன் அடிக்கடி தொடர்பில் இருந்ததை ‘எப்ஸ்டீன் கோப்புகள்’ (Epstein files) காட்டுகின்றன.
இதேவேளை, “நிச்சயமாக பின்னணி சோதனைகள் மற்றும் நேர்காணல் நடைமுறைகள் இருந்திருக்கும் எனவும் அந்த நேர்காணல்களில் மக்கள் மிகவும் நேர்மையாக இருப்பதை வைத்தே இந்த அமைப்பு இயங்குகிறது. எனவும் பின்னணி சோதனைகள் குறித்து ரிச்சர்ட் மூர் தெரிவித்துள்ளார்.
மேலும் மேண்டல்சன் நியமனம் தொடர்பாக எந்தவொரு உளவுத்துறைத் தகவல்களும் தனக்குத் தெரியாது என்று ரிச்சர்ட் கூறியதுடன் ஒருவேளை தனக்குத் தெரிந்திருந்தாலும், அத்தகைய ரகசியத் தகவல்களைப் பகிர முடியாது என்பதையும் அவர் தெளிவுபடுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.
















