அடுத்த பொதுத்தேர்தலில் 16 மற்றும் 17 வயதுடையவர்கள் வாக்களிக்க அனுமதிக்கும் வகையிலான புதிய சட்ட வரைவு (Legislation), நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவ மசோதா (Representation of the People Bill) இன்று தாக்கல் செய்யப்பட்டதுடன் இதில் வாக்களிக்கும் வயதைக் குறைப்பது மட்டுமின்றி, அரசியல் நன்கொடைகளுக்கான விதிகளைக் கடுமையாக்குதல் மற்றும் வெளிநாட்டுத் தலையீடுகளிலிருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
இதேவேளை, எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலின் போது, மக்கள் எளிதாக வாக்களிக்க ஏதுவாக இங்கிலாந்தில் உள்ள ஏழு உள்ளூராட்சி மன்றங்கள் ரயில் நிலையங்கள் அல்லது பல்பொருள் அங்காடிகள் (Supermarkets) போன்ற இடங்களில் வாக்குச்சாவடிகளை அமைத்துப் பரிசோதிக்கவுள்ளன.
இந்நிலையில் வாக்களிக்கும் வயதைக் குறைப்பதன் மூலம் இளைஞர்களை ஜனநாயகத்தில் ஈடுபடுத்தவும், அவர்களின் குரல் கேட்கப்படுவதை உறுதி செய்யவும் முடியும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, 16 வயதுடையவர்களுக்கு வாக்களிக்கத் தேவையான வாழ்க்கை அனுபவம் இருக்குமா என்று எதிர்தரப்பினர் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்நிலையில் “18 வயதில்தான் ஒருவரைப் பெரியவர்களாகக் கருத முடியும் எனவும் அப்போதுதான் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும்” எனவும் கன்சர்வேட்டிவ் கட்சியின் (James Cleverly ) ஜேம்ஸ் கிளெவர்லி கருத்து வெளியிட்டுள்ளார்.
தற்போது ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸில் உள்ள உள்ளூர் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் 16 வயதுடையவர்கள் வாக்களிக்கலாம். ஆனால், இங்கிலாந்து நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் வடக்கு அயர்லாந்து தேர்தல்களில் இன்னும் 18 வயதே குறைந்தபட்ச வரம்பாக உள்ளது.
இந்த மாற்றம் அமலுக்கு வந்தால், 1969-ஆம் ஆண்டு வாக்களிக்கும் வயது 21-லிருந்து 18-ஆகக் குறைக்கப்பட்டதற்குப் பின்னர் நடைபெறும் மிகப்பெரிய மாற்றமாக இது அமையும்.
அரசியல் கட்சிகளுக்கு வெளிநாட்டவர்கள் நிதி வழங்குவதைத் தடுக்க இந்த மசோதா கடுமையான விதிகளைக் கொண்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இந்த மசோதா சட்டமாவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் (MPs) மற்றும் பிரபுக்கள் சபை (Peers) என இரு தரப்பிலும் ஒப்புதல் பெற வேண்டும்.
இதற்குப் பல மாதங்கள் ஆகலாம்.
2029-க்குள் நடைபெறவுள்ள அடுத்த பொதுத்தேர்தலுக்குள் இதை நடைமுறைப்படுத்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.














