ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை அந்த நாட்டுடன் எவ்விதமான இராஜதந்திர உறவுகளையும் பேணப்போவதில்லை என கனடா அறிவித்துள்ளது.
ஜெர்மனியில் நடைபெற்று வரும் மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் (Munich Security Conference) கலந்துகொண்டு உரையாற்றிய கனடா வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்த் (Anita Anand), இது தொடர்பான கனடாவின் நிலைப்பாட்டை உத்தியோகபூர்வமாக வெளிப்படுத்தியுள்ளார்.
ஈரானில் தற்போதைய ஆட்சி முறையில் மாற்றம் ஏற்படும் வரை அந்நாட்டுடன் தூதரக உறவுகளை மீள ஆரம்பிக்கும் எண்ணம் கனடாவிடம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஈரான் அரசாங்கத்துடன் தொடர்புடைய ஏழு நபர்களுக்கு எதிராக மேலதிக தடைகளை கனடா விதித்துள்ளது.
ஈரானில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் மற்றும் அடக்குமுறைகள் குறித்து கனடா அதிக கவனம் செலுத்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
கனடா ஏற்கனவே கடந்த 2012ஆம் ஆண்டு முதல் ஈரானுடனான தனது இராஜதந்திர உறவுகளைத் துண்டித்துள்ளது. இதனிடையே, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஆதரிக்கும் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
ஈரான் மீது தாக்குதல் நடத்த ஜனாதிபதி உத்தரவிடும் பட்சத்தில், பல வாரங்கள் நீடிக்கக்கூடிய இராணுவ நடவடிக்கைகளுக்கு அமெரிக்க பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் தயாராகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் ஒரு கட்டமாக, இரண்டாவது விமானம் தாங்கி போர்க்கப்பல் ஒன்றும் அந்தப் பிராந்தியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அமெரிக்காவின் இத்தகைய இராணுவத் தாக்குதல்களுக்கு கனடா தனது ஆதரவை வழங்குமா என்பது குறித்து அமைச்சர் அனிதா ஆனந்த் நேரடியான பதில்கள் எதனையும் வழங்கவில்லை.


















