உக்கிரமடைந்து வரும் மத்திய கிழக்கு நெருக்கடியால் அதிகரித்து வரும் தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார அபாயங்கள் தொடர்பில் கலந்துரையாட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, வெளியுறவுக் கொள்கை நிபுணர்கள், முன்னாள் வெளியுறவுக் கொள்கை அதிகாரிகள் மற்றும் சர்வதேச உறவுகள் துறைசார் புத்திஜீவிகளுடன் கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் அவசர சந்திப்பொன்றை நேற்று (11) கூட்டியுள்ளனர்.
4.1 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டிய பொருளாதார இழப்புகளை ஏற்படுத்திய, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 4 சதவீதமளவில் பாதிப்புகளை ஏற்படுத்திய டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவிற்குப் பிறகு இலங்கை மீட்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கின்றது என இந்தக் கலந்துரையாடலின்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வேகமாக அதிகரித்து வரும் மோதல்கள் இப்போது இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தை நேரடியாகப் பாதித்து வருவதாகவும் அவர் இங்கு சுட்டிக்காட்டினார். கடந்த வாரம், மார்ச் 4 ஆம் திகதி, காலி கடற்பரப்பில் இருந்து 19 கடல் மைல் தொலைவில் ஈரானிய போர்க்கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலான “ஐரிஸ் டேனா”வை மூழ்கடித்தது. இந்த மூழ்கிய சம்பவத்தால், இது இலங்கைக்கு ஆபத்தான முறையில் நெருக்கமாகிவிட்டதாக சஜித் பிரேமதாச இங்கு சுட்டிக்காட்டினார்.
இக்கூட்டத்தின்போது, எதிர்க்கட்சித் தலைவரால் மக்களைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்தவேண்டிய நான்கு முன்னுரிமை துறைகள் முன்வைக்கப்பட்டன:
01. தேசிய வலுச்சக்தி அவசரநிலையை பிரகடனப்படுத்தல்.
தற்போது இலங்கையிடம் சுமார் ஒரு மாத காலத்திற்கு மாத்திரம் போதுமான சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் கையிருப்பு மட்டுமே காணப்படுகின்றன. ஹோர்முஸ் நீரிணையைச் சூழ தொடர்ச்சியாக ஏற்படும் தடைகளால் உலக எண்ணெய் விலை வேகமாக அதிகரிக்கும் அச்சுறுத்தல் நமது நாட்டிற்கு மிகவும் ஆபத்தான முறையில் வெளிப்படுகிறது.
கணிக்க முடியாத ஆட்டங்களுடன் கூடிய உலக புதைபடிவ எரிபொருள் சார்பிலிருந்து விடுபட ஒரே வழியாக, தேவையற்ற தாமதமான நடைமுறைகளை நீக்கி பெரும் அளவிலான சூரிய மற்றும் காற்றாலை திட்டங்களை உடனடியாக முன்னெடுப்பது இன்றியமையாதது.
02. வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் அவர்களது வருமான வழிகளைப் பாதுகாத்தல்.
இங்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் வெளிநாட்டில் தொழில் புரிந்து வரும் இலங்கைத் தொழிலாளர்கள் தொடர்பாக மிகக் கூடிய கவனத்தை செலுத்தினார். தற்போது 1.5 மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்கள் மத்திய கிழக்கில் தொழில்களில் ஈடுபட்டிருக்கும் நிலையில், அவர்களின் உழைப்பு காரணமாக 2025 ஆம் ஆண்டில் 8.076 பில்லியன் டொலர் வருமானத்தை எமது நாட்டிற்கு ஈட்ட முடிந்தது.
நீண்டகால மோதல் சூழ்நிலைக்கு மத்தியில் பிராந்திய வங்கிக் கட்டமைப்புகள் சரிவுகளைக் கண்டாலும், இத்தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பாக தங்கள் ஊதியங்களை தங்கள் வீடுகளுக்கு அனுப்பிக்கொள்ள முடியும் வகையில் பாதுகாப்பான தொழில்நுட்பம் கொண்ட உதவி முறைமை ஒன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
03. கடல் காப்புறுதித் திட்டம் மூலம் ஏற்றுமதிப் பொருளாதாரத்தைப் பாதுகாத்துக் கொள்ளல்.
நமது ஏற்றுமதிப் பொருளாதாரத்திற்கு காணப்படும் பெரும் அச்சுறுத்தல்களையும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு எடுத்துரைத்தார். உலக கப்பல் போக்குவரத்துக் கட்டணங்கள் போர்ச் சூழலுக்கு முன்னரான காலத்தில் காணப்பட்ட சாதாரண மட்டத்தை விட 115 சதவீதம் உயர் மட்ட நிலையில் இன்னும் நீடிக்கின்றன.
ஐரிஸ் டேனா கப்பல் மூழ்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடல் போர் அபாய காப்புறுதிக் கட்டணங்கள் ஒரு கப்பலுக்கு 750,000 டொலர் வரை மூன்று மடங்கு அதிகரித்துள்ளன. இலங்கையின் தேயிலை மற்றும் ஆடை தொழில்களுக்கான உலக சந்தை பாதிக்கப்படாத நிலையை உருவாக்கிக்கொள்வதற்காக இந்த பெரும் வணிகச் செலவுகளை மானியமாக ஏற்கும் வகையில் அரச உதவியுடன் கூடிய கடல் காப்புறுதி இருப்பொன்றை உருவாக்க வேண்டும்.
04. உண்மையான இராஜதந்திர நடுநிலைமையை உறுதிப்படுத்துதல்.
இறுதியாக, இலங்கையின் இராஜதந்திர நிலைப்பாடு தொடர்பில் இந்த கலந்தாய்வில் மேலும் கவனம் செலுத்தப்பட்டன. இலங்கை கடற்படையால் மூழ்கிய கப்பலிலிருந்து 32 ஈரானிய கடற்படை வீரர்களை மீட்டு, சர்வதேச கடல் சட்டத்தை நிலைநாட்டிய அதன் தலையீட்டிற்காக கடற்படையை பாராட்டிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள், அரசாங்கம் இன்னும் செயல்திறனுடனும் நடைமுறைக்கேற்பவும் இயங்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
செயலற்ற கண்காணிப்பாளராக ஒதுங்கி நிற்பதற்குப் பதிலாக, Indian Ocean Rim Association (IORA) இல் தனது தலைமைப் வகிபாகத்தை வணிக கப்பல் வழிப் பாதைகளை இராணுவமயமாக்குவதை தவிர்க்கும் முன்னெடுப்பை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு செயற்திறனோடு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இக்கூட்டத்தை நிறைவு செய்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் மிகவும் தெளிவாக கூறியது என்னவெனில், குறை கூறுவதை விட தீர்வுகளை முன்வைப்பதே எதிர்க்கட்சியின் நோக்கம் என்பதாகும். “இறக்குமதி வலுச்சக்து செலவு அதிகரிப்புக்கு இணையாக 2026 ஏப்ரல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள 18 சதவீத டிஜிட்டல் வெட் வரி போன்ற எதிர்காலத்தில் அமுலுக்கு வரவிருக்கும் வருமான ஈட்டல் வழிகள் மூலம் உழைக்கும் வர்க்கத்தை நசுக்கி ஒடுக்காமல் இருக்க உறுதி செய்யவும் அரசாங்கத்தை பொறுப்பு கூறச் செய்ய வேண்டும்” என்றும் அவர் இங்கு குறிப்பிட்டுள்ளார்.
நம்பமுடியாத அளவு கொந்தளிப்பான இக்காலகட்டத்தில் நாட்டில் அமைதி, நெகிழ்வுத் தன்மை மற்றும் நிலையான தன்மையை எட்டிக்கொள்வதற்கு அசைக்கமுடியாத அர்ப்பணிப்புடன் முன்னோக்கி நடவடிக்கைகளை எடுப்பதில் ஐக்கிய மக்கள் சக்தி தனது முழு கவனத்தையும் செலுத்தியுள்ளது.

















