2026 இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் பங்கேற்க விரும்பும் இலங்கை வீரர்களுக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் (SLC) கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது.
இலங்கை தேசிய கிரிக்கெட் வீரர்களின் உடல் செயல்திறனை சர்வதேச தரத்திற்கு மேம்படுத்தும் நோக்கில், ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தற்போது எட்டு வார கால சிறப்பு பயிற்சித் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்படும் ‘கட்டாய உடல் செயல்திறன் சோதனையில்’ (Physical Fitness Test) சித்தியடையும் வீரர்களுக்கு மட்டுமே ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கான ‘தடையில்லாச் சான்றிதழ்’ தடையில்லாச் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நடைபெற்று வரும் உடற்தகுதி சோதனைகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள துஷ்மன்த சமீர,
பெத்தும் நிசன்க, மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகிய வீரர்களுக்கு ஐபிஎல் தொடரில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது
இந்நிலையில் முன்னணி வீரர்களான வனிந்து ஹசரங்க, மதீஷ பத்திரண மற்றும் ஏஷான் மாலிங்க ஆகியோர் தற்போது காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்று வருவதால், அவர்கள் இன்னும் இந்தச் சோதனையில் பங்கேற்கவில்லை.
இவர்கள் முழுமையாகக் குணமடைந்து தேகாரோக்கியத்தைப் பெற்ற பின்னரே உடற்தகுதிச் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேகப்பந்து வீச்சாளர் நுவன் துஷார ஐபிஎல் தொடரில் பங்கேற்பது, அவர் மேற்கொள்ளவுள்ள உடல் செயல்திறன் சோதனையின் முடிவிலேயே தங்கியுள்ளது.
இந்தச் சோதனையில் அவர் நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளை எட்டினால் மட்டுமே அவருக்கு தடையில்லாச் சான்றிதழ் வழங்கப்படும்.
அடுத்துவரும் சர்வதேச போட்டிகளைக் கருத்திற்கொண்டு, வீரர்கள் முழுமையான உடற்தகுதியுடன் இருப்பதை உறுதி செய்யவே இந்த கடுமையான நடைமுறைகள் பின்பற்றப்படுவதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.


















