இலங்கை கடற்படையினர் அண்மையில் முன்னெடுத்த விசேட நடவடிக்கைகளில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 53 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையின் கடல் வளத்தைப் பாதுகாக்கும் நோக்கில், மார்ச் 03 முதல் 18 ஆம் திகதி வரை நாடு தழுவிய ரீதியில் கடற்படையினர் விசேட சோதனைகளை முன்னெடுத்தனர்.
கிழக்கு, வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் தெற்கு கடற்படை கட்டளைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 53 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 13 டிங்கிப் படகுகள் மற்றும் 4 டிராக்டர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன், மீன்பிடி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட தடைசெய்யப்பட்ட வலைகள் மற்றும் வெடிபொருட்கள், சட்டவிரோத மின்விளக்குகள், அனுமதிப்பத்திரமற்ற இரவு நேர சுழியோடல் உபகரணங்கள்,
விஞ்சுகள் (Winches)சட்டவிரோதப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வெடித்தலதீவு, சவுத்பார், வங்காலை, புத்தளம், உடப்புவ, உடையூர்புதி, வாகரை, கண்டலடி, களுவான்கேணி, பால்ச்சேனை, சவுக்கடி, மண்டைதீவு, திருகோணமலை, கின்னியா, கொக்கிளாய் மற்றும் காலி அக்குரலை உள்ளிட்ட கடற்கரை மற்றும் கடல் பகுதிகளில் இந்தச் சோதனைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும், கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் மற்றும் மீன்பிடி உபகரணங்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அந்தந்தப் பகுதி பொலிஸ் நிலையங்கள், விசேட அதிரடிப்படையினர் மற்றும் மீன்வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இலுப்புக்கடவை, மன்னார், புத்தளம், மட்டக்களப்பு மற்றும் காலி போன்ற பகுதிகளில் உள்ள உரிய அதிகாரிகளிடம் இவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கடற்படை தெரிவித்துள்ளது.














