ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கொவிட் காலத்தில் காணாமல் போன தம்பதியரின் உடல்கள், கொழும்பு, கிரேண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள வெல்லம்பிட்டிய, கம்பிகொட்டுவ பகுதியில் உள்ள ஒரு கால்வாயில் இருந்து நேற்று (24) மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
62 வயதான சுனில் குமாரசிங்க மற்றும் கமந்த சில்வா ஆகியோரே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டவர்கள் ஆவர்.
2020-ஆம் ஆண்டில் அவர்களது உறவினர்களால் குறித்த தம்பதியர் காணாமல் போனதாகப் முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது.
முதற்கட்ட விசாரணைகளில் எந்தத் துப்பும் கிடைக்காத நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் ஜனாதிபதி செயலகத்திடம் முறையிட்டனர்.
அதனைத் தொடர்ந்து, செயலகம் இவ்வழக்கை கொழும்பு குற்றப் பிரிவிடம் ஒப்படைத்தது.
சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் இந்திகா லோகுஹெட்டியின் மேற்பார்வையில், பாதிக்கப்பட்டவர்களின் இல்லத்திற்கு அருகில் வசித்து வந்த ஒரு தம்பதியினரிடம் புலனாய்வாளர்கள் விசாரணை நடத்தினர்.
அதையடுத்து, பொலிஸார் சந்தேகத்திற்குரிய தம்பதியினரையும், அவர்களுடன் தொடர்பிலிருந்து மற்றொரு நபரையும் கைது செய்தனர்.
அவர்களில் இருவர் போதைப்பொருளுக்கு கடுமையாக அடிமையாகியிருந்தனர் என்பது விசாரணைகளில் கண்டறியப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்கள் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டதாகவும், பெண்ணின் தங்க நகைகள் திருடப்பட்டதாகவும், உடல்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு மறைக்கப்பட்டதாகவும் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.
பல சந்தர்ப்பங்களில் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டபோது, பிரதான சந்தேக நபர் அவற்றை மீண்டும் புதைத்ததாகக் கூறப்படுகிறது.
இந்தக் கொலைகளுடன் தொடர்புடைய மற்றொரு சந்தேக நபரைக் கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.















