வடமேற்கு லண்டன் புறநகர்ப் பகுதி ஒன்றில் கடந்த திங்கட்கிழமை தீ வைப்புத் தாக்குதலில் அழிக்கப்பட்ட யூத சமூக அமைப்புக்குச் சொந்தமான அம்பியூலன்ஸ் வாகனங்களுக்கு பதிலாக இங்கிலாந்து அரசாங்கத்தால் கடனாக நான்கு மாற்று அம்பியூலன்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.
உள்ளூர் நேரப்படி நேற்று பிற்பகல் சுமார் 1.30 மணியளவில் லண்டன் அம்பியூலன்ஸ் சேவைக்கு சொந்தமான வாகனங்கள் கோல்டர்ஸ் கிரீனில் உள்ள யூத தொண்டு நிறுவனத்தின் வாகன நிறுத்துமிடத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நிரந்தர மாற்று அம்பியூலன்ஸ்கள் வழங்கப்படும் வரை, ஆரம்பத்தில் கடனாகப் பெறப்படும் நான்கு மாற்று வாகனங்களுக்கான செலவை அரசாங்கம் ஏற்கும் என்று இங்கிலாந்து அரசாங்கத்தின் சுகாதாரச் செயலாளர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் (Wes Streeting) தெரிவித்தார்.
யூத தொண்டு நிறுவனமாக ஹட்சோலாவுக்குச் சொந்தமான அம்பியூலன்ஸ்கள் திங்கட்கிழமை அதிகாலை கோல்டர்ஸ் கிரீனில் தீக்கிரையாக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து, லண்டன் பெருநகர காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு இது குறுத்த விரிவான விசாரணைகளை தொடங்கியுள்ளது.
இந்த விசாரணைகளில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை, ஆனால் ஐரோப்பா முழுவதும் இதேபோன்ற பல தீ வைப்புச் சம்பவங்களுக்குப் பொறுப்பேற்றுள்ள, ஈரானுடன் தொடர்புள்ள இஸ்லாமியக் குழு இந்த நாசகார செயலுக்கு காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.















