யாழில் இ.போ.சவின் இறைமையுள்ள நிலப்பரபில் அமைக்கப்பட்டுள்ள பொது மலசலகூடத்தை நிர்வகிப்பது தொடர்பில் யாழ். மாநகர சபைக்கும் இ.போ.சவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள குழப்ப நிலை இன்று (28)பெரும் பிரச்சினையாக மாறியதால் யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் சிலமணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
இன்று காலை யாழ். மாநகர சபையின் ஊழியர்கள் குறித்த மலசல கூடத்தொகுதிக்கு நீர் இணைப்பை வழங்கும் நோக்குடன் சென்றிருந்த நிலையில் அவர்கள் இ.போ. சபையினரால் தடுக்கப்பட்டதை அடுத்தே பிரச்சினை உருவானது.
முன்பதாக பல்வேறு தரப்பினரது கோரிக்கையின் அடிப்படையில் கடந்த ஆட்சிக்காலத்தில் இ.போ.சவினால் இந்த பொது மலசலகூட கட்டட நிர்மாணத்துக்காக யாழ். ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் திட்ட மொழிவு செய்யப்பட்டு அதற்கான அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது.
யாழ். மத்திய பேருந்து நிலையத்துக்கென குத்தகை ஒப்பந்தம் செய்யப்பட்ட இ.போ.சவின் ஆழுகைக்குட்பட்ட நிலப்பரப்பிலேயே இந்த மலசலகூடம் அமைக்கப்பட்டது.
அத்துடன் பொது மலசலகூடம் கட்டடுவதற்கான அனுமதியையும் இ.போ.ச விடம் யாழ். மாநகரசபை கோரி பெற்றே இத்திட்டம் நிறைவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் கடந்த 13 ஆம் திகதியன்று குறித்த மலசலகூட தொகுதியை குத்தகைக்கு விடுவதற்கான விண்ணப்பத்தை யாழ். மாநகரசபை பத்திரிகை மூலம் கோரியிருந்தது.
இது குறித்து குறித்த தரப்புக்கும் கடிதம் அனுப்பியுள்ளது.
இதற்கு குறித்த நிலப்பரப்பை யாழ். பிரதேச செயலகம் தம்மிடம் பாரப்படுத்தியுள்ளதாக மாநகரசபை தெரிவித்ததாக கூறப்படுகின்றது.
எமக்குரிய நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த பொது மலசலகூடத்தை தன்னிச்சையாக நிர்வகிக்க மாநகரசபை முயன்றால் நாம் சேவையை முடக்கிப் போராடி எமக்கான நீதியைப் பெறுவோம் என்றனர்.
இவ்விடயம் குறித்து யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் கூறுகையில்,
நிலப்பரப்பு அரசுக்கு சொந்தமானது. இது ஒருவருக்கு என வரையறை செய்து கொடுக்கவில்லை. எனவே மக்களுக்கான சேவைக்காக இந்த கட்டட தொகுதியை மாநகரசபை நிர்மாணித்தது.
கட்டுமாணம் நடைபெறும் வரை எந்த பிரச்சினையும் வரவில்லை. ஆனால் மக்கள் பாவனைக்காக திறந்துவிடும் போதுதான் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இ.போ.ச தொடர்ந்தும் இடையூறாக இருந்தால் பொலிசாரின் உதவியுடன் சட்ட உதவியை நாடி நாம் இந்த கட்டடத்தை திறந்தே தீருவோம் என்றனர்.












