அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நிச்சயமற்ற போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட போதிலும், கோடை காலத்தில் இங்கிலாந்தில் எரிசக்தி கட்டணங்கள் கணிசமாக உயரக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
ஈரான் போரினால் கடந்த ஒரு மாதமாக ஹார்முஸ் நீர்வழிப்பாதை திறம்பட மூடப்பட்டதால், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலையில் மிகப்பெரிய உயர்வு ஏற்பட்டு, உலகெங்கிலும் உள்ள பொருளாதாரங்கள் பாதிக்கப்பட்டன.
இதையடுத்து, ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெஹ்ரானுக்கு விதித்த காலக்கெடுவுக்கு இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்திற்கு முன்பு, இரு நாடுகளும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் இரண்டு வாரகால போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டன.
இந்த ஒப்பந்த அறிவிப்பைத் தொடர்ந்து புதன்கிழமை (08) மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 14 சதவீதம் சரிந்து 93.93 அமெரிக்க டொலர்களாகவும், இயற்கை எரிவாயு விலை ஒரு தெர்மிற்கு 17 சதவீதம் சரிந்து 111.26 பென்ஸாகவும் விற்பனையானது.
இந்த நிலையில், போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தாலும், ஹார்முஸ் நீரிணை நிபந்தனைகளுடன் மீண்டும் திறக்கப்பட்டாலும் எரிவாயு விலைகள் இன்னும் சில காலத்திற்கு உயர்ந்த நிலையிலேயே நீடிக்க வாய்ப்புள்ளதாக இங்கிலாந்து நிபுணர்கள் குடும்பங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
















