மத்திய கிழக்கில் தொடரும் பதட்டங்களுக்கு மத்தியிலும், 2026 ஃபிஃபா உலகக் கிண்ணத்தில் ஈரான் பங்கேற்கும் என்பதை சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் கியானி இன்ஃபான்டினோ (Gianni Infantino) உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் கால்பந்து, அரசியலில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஃபிஃபா உலகக் கிண்ணத்தை அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன.
போட்டியில், ஈரான் தனது மூன்று குழுநிலை ஆட்டங்களையும் அமெரிக்காவில் விளையாட உள்ளது.
பெப்ரவரி 28 அன்று மோதல் தொடங்கிய உடனேயே, ஆசியாவின் சிறந்த அணிகளில் ஒன்றாக 2025 மார்ச்சில் உறுதிசெய்யப்பட்ட உலகக் கிண்ண நுழைவை நிறைவேற்றுவதற்கான ஈரானின் திறன் மற்றும் விருப்பத்தின் மீது சந்தேகம் எழுந்தது.
2026 மார்ச் மாதத்தின் முதல் பாதியில், ஈரான் அரசாங்க அதிகாரிகள், தங்கள் அணியால் உலகக் கிண்ணத்தில் விளையாட முடியாது என்றும், அமெரிக்காவுக்குப் பயணிக்க முடியாது என்றும், மேலும் ஈரானின் ஆட்டங்களை ஃபிஃபா மெக்சிகோவுக்கு மாற்ற வேண்டும் என்றும் பல்வேறு விதங்களில் தெரிவித்தனர்.
இருப்பினும், ஃபிஃபா அந்தக் கோரிக்கையை நிராகரித்துவிட்டதாகவும், உலகக் கிண்ணத்தை திட்டமிட்டபடி நடைபெறும் என்று உலக கால்பந்தாட்ட நிர்வாக அமைப்பு வலியுறுத்தியுள்ளதாகவும் மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷெயின்பாம் கடந்த வாரம் உறுதிப்படுத்தினார்.
இந்த நிலையில், வொஷிங்டன் டி.சி.யில் புதன்கிழமை CNBC செய்திச் சேவை நடத்திய பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போது ஃபிஃபா தலைவர் இன்ஃபான்டினோ,
ஈரானிய அணி நிச்சயமாக போட்டியில் விளையாடுவதற்கு வரும்.
நிச்சயமாக, அதற்குள் நிலைமை அமைதியானதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம், ஈரான் போட்டியில் அவசியம் போட்டியில் பங்கெடுக்க வேண்டும்.
அவர்கள் தங்கள் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள், அவர்கள் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டார்கள். வீரர்கள் விளையாட விரும்புகிறார்கள் என்று கூறினார்.
எதிர்வரும் ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை நடைபெறும் போட்டிக்காக, ஈரானியக் குழுவினர் ஜூன் 10 ஆம் திகதிக்குள் அரிசோனாவுக்கு பயணிக்க வேண்டும்.
ஈரான் அணியின் முதல் ஆட்டம் ஜூன் 15 அன்று கலிபோர்னியாவின் இங்கிள்வுட்டில் உள்ள சோஃபி மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற உள்ளது.
ஜூன் 21 அன்று அதே மைதானத்தில் பெல்ஜியத்தையும், அதைத் தொடர்ந்து ஜூன் 26 அன்று சியாட்டிலில் எகிப்தையும் எதிர்கொள்ள உள்ளது.
இப்போட்டியில் ஈரான் முன்னேறினால், அதன் நாக்-அவுட் ஆட்டங்களும் பெரும்பாலும் அமெரிக்காவிலேயே நடைபெறும்.















