பிரித்தானியாவின் பெம்ப்ரோக்ஷையர் (Pembrokeshire) பகுதியில் உள்ள 11-ஆம் நூற்றாண்டு கோட்டை ஒன்றின் கீழ் மறைந்துள்ள பிரம்மாண்ட குகை, மனித வரலாற்றின் ஆரம்ப காலத்தைப் பற்றிய புரிதலை முற்றாக மாற்றியமைக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பெம்ப்ரோக் கோட்டைக்கு அடியில் அமைந்துள்ள ‘வோகன் குகை’ (Wogan Cavern) எனப்படும் இந்த இடத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட அகழ்வாராய்ச்சிகளில், 1,20,000 ஆண்டுகளுக்கு முன்பு வேல்ஸ் பகுதியில் சுற்றித் திரிந்த நீர்யானையின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இது தவிர, மாமத் யானைகள் மற்றும் உரோமக் காண்டாமிருகங்களின் (Woolly Rhinoceros) நன்கு பாதுகாக்கப்பட்ட எலும்பு எச்சங்களும் மீட்கப்பட்டுள்ளன.
75 அடி நீளமும், 32 அடி உயரமும் கொண்ட இந்த குகை மிகவும் பிரம்மாண்டமானது.
விக்டோரியன் காலத்தில் தோண்டப்பட்டதாகக் கருதப்படும் இந்தக் குகைக்கு, கோட்டையிலிருந்து சுழல் ஏணி வழியாகச் செல்ல முடியும்.
2021 முதல் 2024 வரையிலான ஆய்வுகளில், 1,00,000 ஆண்டுகளுக்கும் மேலான மனித மற்றும் விலங்குகளின் நடமாட்டத்திற்கான ஆதாரங்கள் இங்கு புதைந்து கிடப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் குறித்து அபெர்டீன் பல்கலைக்கழகத்தின் கலாநிதி ராப் டின்னிஸ் (Dr. Rob Dinnis) கூறுகையில்:
“இது போன்ற ஒரு தளம் பிரித்தானியாவிலேயே இல்லை. இது வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கக்கூடிய அரிய கண்டுபிடிப்பு. இங்கு ‘ஹோமோ சேபியன்ஸ்’ (Homo sapiens) மற்றும் அவர்களுக்கு முந்தைய ‘நியாண்டர்தால்கள்’ (Neanderthals) வாழ்ந்ததற்கான மிக அரிதான சான்றுகள் கிடைக்கத் தொடங்கியுள்ளன.” என தெரிவித்துள்ளார்.
இந்தக் குகையின் முக்கியத்துவத்தைக் கருத்திற்கொண்டு, அபெர்டீன் பல்கலைக்கழகம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குப் பெரிய அளவிலான அகழ்வாராய்ச்சித் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளது.
இதன் மூலம்: 11,500 ஆண்டுகளுக்கு முந்தைய வேட்டைக்காரர்கள் பற்றிய தகவல்கள், 45,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஆரம்பகால மனிதர்களின் வாழ்வியல், பனி யுகத்திற்குப் பிந்தைய கால மாற்றங்கள்,
ஆகியவற்றை விரிவாகப் புரிந்துகொள்ள முடியும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
பிரித்தானியாவின் ஆரம்பகால மனித வரலாற்றைப் பதிவு செய்யும் மிக முக்கியமான ஆவணமாக ‘வோகன் குகை’ உருவெடுத்துள்ளமை சர்வதேசத் தொல்பொருள் ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.













